பட்டியலின வகுப்பை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எல்லாம் உட்கொள்ள முடியாது என கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு நபர்கள் முரண்டு பிடிக்கும் சம்பவம் நடந்துள்ளது. குஷிநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 5 நபர்களை அங்குள்ள ஆரம்ப பள்ளியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடுத்தர வயது மதிக்கத்த இருவர் மட்டும் தினமும் காலை மாலை வேளைகளில் தங்களது வீடுகளுக்கு சென்று உணவு எடுத்துக்கொள்கின்றனர். இந்த விவகாரம் தற்போது அங்கு பூதாகரமாகியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தினால் லீலாவதி என்ற பெண்ணை இந்த 5 நபர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப்பெண் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி அவர் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள முடியாது என இருவரும் கூறியுள்ளனர். ‘பட்டியலின பெண் சமைத்த உணவுகளை எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த இரண்டு வாரங்களாக எங்களது வீடுகளுக்கு சென்று உணவு எடுத்துக்கொள்கிறோம். காலை, மாலை என இருவேளைகளும் நடந்தே வீட்டுக்கு சென்று பிறகு இந்த மையத்துக்கு திரும்பிவிடுவோம்’என இருவரும் கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லீலாவதி பேசுகையில், “இங்கு ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுக்கு பயந்து வாழந்து வருகின்றனர். உயர்அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உணவுகளை சமைத்து கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டேன். உணவுகளை சமைக்கும்போது கைகளில் க்ளவுஸ் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்துதான் சமைக்கிறேன்.
காலை மற்றும் மாலையில் அங்கு கொண்டு போய் உணவுகளை வைத்துவிட்டு திரும்பிவிடுவேன். நீ செய்த உணவுகளை எங்களால் சாப்பிடமுடியாது என இருவரும் கூறிவிட்டனர். இதில் எனக்கு எந்தப்பிரச்னையும் இல்லை. இதுகுறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன்.என்றார். அங்கு பணியில் இருக்கும் காவலர்களும் யாரையும் தடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.