தோனி ஏன் ஓய்வு முடிவை இழுத்துக்கொண்டே இருக்கிறார். கபில்தேவுக்கு பணம் தேவையில்லை. ஆனால் இங்கு நிறைய பேருக்கு தேவைப்படுகிறது. நான் சொன்னதை அவர் தவறாக புரிந்துக்கொண்டார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பேசியுள்ளார். ”தோனி தனக்கு இருக்கும் திறனுக்கு ஏற்றவாறு தன்னால் முடிந்ததை நாட்டுக்காக செய்துள்ளார். அதே கண்ணியத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஏன் இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கிறார் எனத் தெரியவில்லை. உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்திருக்க வேண்டும். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் இந்நேரம் நான் ஓய்வு பெற்றிருப்பேன்.
இந்தியாவுக்காக பல அற்புதங்களை செய்துள்ளார். உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்துள்ளார். அவரை நல்லவிதமாக கிரிக்கெட்டிலிருந்து வழியனுப்ப வேண்டும். அவர் அற்புதமான மனிதர்அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இப்போது அவர் தடுமாறுவதாக தெரிகிறது. உலகக்கோப்பை அரையிறுதியில் அவரால் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைக்க முடியவில்லை. அவர் ஓய்வு பெற வேண்டும் என நான் கருதுகிறேன்.
அவர் ஏன் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை என்ற விடை அவரிடம் தான் இருக்கிறது. இன்னொன்றையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன் இந்தியாவுக்கு யுவராஜ் சிங் மற்றும் தோனி போன்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவை’ எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் அக்தர்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தி கொரோனாவுக்கு நிதிதிரட்ட வேண்டும் அந்த நிதியை இருநாடுகளும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அக்தர் சில நாள்களுக்கு முன்பு யோசனை கூறியிருந்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த கபில் தேவ்’ கிரிக்கெட்டைவிட வீரர்களின் உயிர்தான் முக்கியம். வீரர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்க முடியாது. நம்மிடம் போதுமான நிதி இருக்கிறது. போட்டியை நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை நாம் அரசுடன் இணைந்து செயல்படுவதுதான் மிகவும் முக்கியமான ஒன்று” என பதில் அளித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அக்தர்,” நான் சொன்னதை கபில்தேவ் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார். உலகமே இன்று பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த சூழலில் நாம் ஒன்றினைந்து நிதி திரட்ட வேண்டும். கபில்தேவ் பணம் தேவையில்லை எனக் கூறியுள்ளார். அவருக்கு தேவையில்லை. ஆனால் மற்றவர்களுக்கு தேவைப்படும். இதுகுறித்து விரைவில் பரிசீலிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
கபில் தேவ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் எங்களுக்கு சீனியர். தனது விருந்தினர்களை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். இந்தியாவில் என்னை நன்றாக கவனித்துக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.