ஊரடங்கால் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு 25 கிலோ அடங்கிய 1 சிப்பம் பொன்னி அரிசியை 963 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால், பலர் வருமானமின்றி உணவிற்காகப் பசியால் வாடும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையைக் கடக்கும் வகையில், அரசும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் விஜயலட்சுமி ராதாகிருஷ்ணன், 24 ஆயிரம் கிலோ அரிசியை 963 குடும்பங்களுக்கு வழங்கி நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி ராதாகிருஷ்ணன்,” கொரோனா பாதிப்பால் நாடே திண்டாடிவருகிறது. வேலைக்குச் செல்ல முடியாத பலரும் முடங்கியுள்ளனர்.
ஒரு பக்கம் அரசு உதவி செய்தாலும், கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்கள் மல்லாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சித்தமல்லிப்பட்டி, ஓடைப்பட்டி, மல்லாகோட்டை ஆகிய மூன்று ஊர்களுக்கும் அரிசி வழங்கலாம் என முடிவுசெய்தோம்.
இதனால் 3 கிராமத்தில் உள்ள நபர்களுக்கு ரேஷன்கார்டு உள்ளவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள், ஆதரவற்றோர் என அனைத்து குடும்பத்தினருக்கும் 25 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் கர்நாடக பொன்னி அரிசி வழங்கினோம்.
பெரிய குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு மூட்டையும், எங்கள் கிராமத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசி மூட்டை என மொத்தம் 963 மூட்டை பொன்னி அரிசியை வழங்கினோம். எங்கள் கிராமத்தில் தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்.
அரசு உதவிகளைவிடவும், எங்களுடைய சொந்தச் செலவில்தான் அதிக உதவிகள் செய்துள்ளோம். கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் அதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். எங்கள் ஊராட்சியில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முன்னேற வேண்டும் என திட்டங்கள் தீட்டி செயல்பட்டுவருகிறோம்.
இதனால் வரும் 3 ஆண்டுகளுக்குள் எங்கள் ஊராட்சியில் உள்ள மூன்று கிராமங்களும் தன்னிறைவுபெற்று, தலைசிறந்த கிராமமாக உருவாகும்” என்றார் நம்பிக்கையுடன்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.