கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசுக்கு கைகொடுக்கும் விதமாக தனியார் நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இவ்வரிசையில் தமிழகத்தின் முன்னணி உணவுகள் தயாரிப்பு நிறுவனமான நாகா குழுமம் கொரோனா நிவாரணத்துக்காக உணவுப் பொருள்கள் மற்றும் பண உதவியை வழங்கியுள்ளது.
நாகா குழுமத்தின் மேலான் இயக்குனர் சீ. கமலக்கண்ணன் ரூபாய் 2 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரண நிதியை, கொரோனா நிவாரணத்துக்காக நாகா குழுமம் வழங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த நாகா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌந்தர் கண்ணன் மற்றும் துணைத் தலைவர் விஜய் ஆனந்த், ரூ. 1.25 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்களை வழங்கினர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருள்களையும், நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினர்.
“நாகாவின் இந்த உதவி மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சிகொள்கிறோம். இக்கட்டான இந்தச் சூழலில் நாம் அனைவரும் உணவு மற்றும் உணவுப் பொருள்களை விரயம் செய்யாது, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது நாகா குடும்பத்தின் வேண்டுகோள்.” என்றார் நாகா குழும மேலாண் இயக்குனர் சீ. கமலக்கண்ணன்.