கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதையும் இந்த நேரத்தில் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. அத்தியாவசித் தேவைகளில் ஒன்றான காய்கறிகள் வாங்குவதற்காக ஊரடங்கு நேரத்தில் மக்கள் கடைகளுக்கும் சந்தைகளுக்கும் செல்கின்றனர்.
இந்நிலையில் சந்தைகளில் வாங்கும் காய்கறிகளைப் பலரும் கையாள்கின்றனர். அதற்குப் பிறகுதான் அவற்றை நாம் வாங்க வேண்டியிருக்கிறது. காய்கறிகளை எவ்வாறு பாதுகாப்பாக வாங்குவது? அவற்றை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்று விகடனின் கொரனோ அப்டேட்ஸ் என்ற சிறப்புப் பக்கத்தில் வாசகர் விஜய் என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
காய்கறிகளைக் கையாள்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் பொது மருத்துவர் கு.அருணாசலம்.
“கொரோனா வைரஸ் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் 72 மணி நேரம் வெளியில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. பொதுவான இடங்களில் ஆறு மணி நேரம்வரை உயிருடன் இருக்கும் என்பதால் காய்கறிகளை வாங்கும்போதும் கவனமாகவே இருக்க வேண்டும். அதிகம் பேர் கையாண்டிருப்பார்கள் என்பதால் இந்த நேரத்தில் காய்கறிகளில் அதிகம் கை வைத்துத் தேடி, தெரிவு செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது. கைகளில் கிடைக்கும் காய்கறிகளைச் சட்டென்று வாங்கிவிட்டு நகர்ந்துவிட வேண்டும்.
கடைகளும் இந்த நேரத்தில் நல்ல மனதோடு காய்கறிகளை எடைபோட்டு பேப்பரில் கட்டியோ, கூறுபோட்டோ வைத்துவிட்டால், அவற்றை மட்டும் வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்வார்கள். வாடிக்கையாளர்களைக் கடைகளுக்குள் அனுமதிக்காமல், வெளியில் நிற்க வைத்து அவர்களுக்கு வேண்டிய காய்கறிகளை மட்டும் எடுத்துக்கொடுப்பது நல்லது.
ஈரப்பதமுள்ள இடங்களில் கிருமிகள் அதிக நேரம் வாழும். அதனால் நோய்ப் பரவல் அதிகமுள்ள இந்த நேரத்தில் ஏ.சி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதனால் காய்கறிக் கடைகளில் ஏ.சியின் பயன்பாட்டை நிறுத்தலாம். பொதுமக்களும் தள்ளுவண்டியிலோ சந்தைகளிலோ காய்கறிகளை வாங்குவது நல்லது. காய்கறிக் கடைகளிலுள்ள கூடையைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அவற்றிலும் கிருமிகள் காணப்படும்.
கடைகளுக்குச் செல்வதற்கு முன்பும், சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உடனும் கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். கடைக்குச் சென்று வரும் நேரத்தில் முகத்தில் கைகள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகளை வாங்கி வந்து சோப் தண்ணீரில் ஒருமுறை கழுவிவிட்டு, மீண்டும் நல்ல தண்ணீரில் ஊற வைத்துக் கழுவி காய வைத்துவிடலாம். ஈரம் காய்ந்த பிறகு அவற்றைப் பயன்படுத்தலாம். மீண்டும் பயன்படுத்தும்போதும் காய்கறிகளைக் கழுவிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
காய்கறிகளைக் கழுவிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். சிலர் காய்கறிகளை வினிகரில் ஊற வைத்துக் கழுவுகிறார்கள். அதில் அசிடிக் அமிலம் உள்ளது என்பதால் வினிகர் பயன்படுத்த வேண்டாம்.
தேங்காய், வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைத் தண்ணீரில் கழுவ முடியாது. அதனால் தோலை உரித்துவிட்டு வெறும் தண்ணீரில் கழுவிவிட்டுப் பயன்படுத்தவும். அவற்றை நன்றாக வேக வைத்துச் சாப்பிடவும். காய்கறிகளைக் கையாள்வதற்கு முன்பும் பின்பும், சமைப்பதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும்.
காய்கறிகளைக் கையாளும்போதும், வெட்டும்போதும், சமைக்கும்போது முகத்தைத் தொடாமல் இருப்பது நல்லது. வீட்டில் காய்கறி நறுக்கிக்கொண்டு இருக்கும்போதே குழந்தைகள் ஓடி வந்து தேங்காய் பத்தை அல்லது கேரட், மாங்காய் போன்றவற்றை எடுத்துச் சாப்பிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட வேண்டும். பச்சையாக இந்த நேரத்தில் காய்கறிகளைச் சாப்பிடக்கூடாது. வேக வைக்கும்போது 100 டிகிரி வெப்பநிலைக்கு மேல் சமைத்துச் சாப்பிட்டால் உணவினால் நோய் பரவாது” என்கிறார்.
Also Read: கொரோனா பரிசோதனையை கட்டணமில்லாமல் செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம்
#Corona அப்டேட் #NowAtVikatan