ஊரடங்கு உத்தரவினால் நடக்க இருந்த நடிகர் யோகி பாபுவின் வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தனது குலதெய்வக் கோயிலில் நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். மிக எளிய அளவில் இந்தத் திருமணம் நடந்தது. அதன்பிறகு சென்னையில் ஏப்ரல் 5 ஆம் தேதி தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு திரைத்துறையினர் மற்றும் திரை நட்சத்திரங்களை அழைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக திடீரென்று நாடு முழுவதும் ஊரடங்குப் போடப்பட்டது. அதனால் வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைக்கப்பட்டது.
பல வருடங்களாகவே இவரது திருமணம் எப்போது நடக்கும் என திரைத்துறையினர் அவரை ஜாலியாக கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தனர். அப்போது எல்லாம் சிரித்து அதனைக் கிண்டலாக சமாளித்து வந்தார் யோகி பாபு. பலரையும் போல தனது திருமணம் எப்போது நடக்கும் என்று கனவுக் கண்டுகொண்டிருப்பதாகப் பலரது கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார்.
ஆனால் அவர் நினைத்ததைப் போல திருமணம் முடிந்தும் அவரால் அதனைத் தடபுடலாகக் கொண்டாட முடியவில்லை. இப்போது படப்பிடிப்பு முடங்கிப் போய் உள்ளது. பலரும் வேலை இல்லாமல் உள்ளனர். திருமணத்திற்கு முன்பாக திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இருந்து வந்த யோகி பாபுக்கு இப்போது அதிகப்படியான நேரம் கிடைத்துள்ளது. அவர் தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டில்தான் உள்ளார்.
வேலையில்லாமல் வீட்டிலேயே இருப்பதால், பல வருடங்கள் கழித்து தனது தாய், சகோதரி மற்றும் சகோதரருடன் சேர்ந்து இருக்க அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இவர் அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுகிறார். புதுமாப்பிள்ளையான அவர், திருமணம் முடிந்ததும் பிசியாக நடிக்கச் சென்றிருந்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.
இந்நிலையில் இந்த ஓய்வுக் காலத்தைப் பயன்படுத்தி, அவர் பழைய கிளாசிக் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து வருகிறார். இதற்கான தருணம் வாய்த்திருப்பதால் அவர் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு யோகி பாபு ‘கர்ணன்’ மற்றும் ‘வலிமை’ படப்பிடிப்பிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.