காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த 18 பேர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இந்தோனேசியா, மலேசியா நாடுகளைச் சேர்ந்த 16 பேர் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. மீதமுள்ள 15 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என ரிசல்ட் வந்தநிலையில், மலேசியா நாட்டின் வேண்டுகோளை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று 4 மலேசியர்கள் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் தேரடிப் பகுதி மசூதியில் தங்கி மதப் பிரசாரம் மேற்கொண்ட காரணத்துக்காக 18 இந்தோனேசியர்கள் மீதும் 2 அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால விதிமீறல், விசா விதிமீறல் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த 41 பேர் தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை சட்ட விதி மீறல், விசா விதி மீறல், 144 ஊரடங்கு தடை விதி மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 18 இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர்கள் மீது மதுராந்தகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, காஞ்சிபுரத்தில் உள்ள 9 வார்டுகளில் 65-க்கும் மேற்பட்ட தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட பாக்ரா பேட்டை, திருக்காலிமேடு போன்ற பகுதிகளில் தடையையும் மீறி சிறிய சிறிய சந்துகள் வழியாக இருசக்கர வாகனங்களில் மக்கள் அதிக அளவில் சென்றுவருகிறார்கள். அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக மீறப்பட்டு வருகிறது.