இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து கடும் யுத்தம் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் போன்ற அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தி.மு.க-வின் மாநில மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து 600 கி.மீ தூரம் தனியாகக் காரில் பயணித்து தன் சொந்த தொகுதிக்கு நேரில் சென்று, அங்கு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சோதனை செய்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள், மாஸ்க், சானிடைசர் போன்றவற்றைக் கொடுத்து உதவியுள்ளார்.
அதேபோல தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து, தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை மருத்துவ உபகரணங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை மேம்படுத்துவதற்காக வழங்கினார். கனிமொழி, தூத்துக்குடியில் உள்ள தன் வீட்டில் தங்கியிருந்து தன் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, வீடுகள் இல்லாதவர்களுக்கு உணவு போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே தி.மு.க-வில் மகளிர் அணியின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருந்து வந்தது. தி.மு.க-வில் மகளிர் அணி செயல்படுகிறதா என்ற அளவுக்கு அவர்களின் பணி இருந்து வந்தது. தேவையில்லாமல் தலைமையைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதும், மகளிர் அணிக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாததுமே இதற்குக் காரணம் எனப் பரவலாகக் கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சுமார் 3 – 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கொரோனா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் தி.மு.க-வின் மகளிர் அணியைக் களத்தில் இறக்கியுள்ளார் கனிமொழி.
Also Read: தயங்கியபடியே கோரிக்கை வைத்த டீன்! – 5 நிமிடங்களில் 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கிய கனிமொழி
தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் அறிந்து அருகில் இருந்து உடனடியாகச் செயல்படும்படி மகளிர் அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி தூத்துக்குடியில் உள்ள கனிமொழியின் வீட்டில் தினமும் 200 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு வீடு தேடிச் சென்று மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் கோயம்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.



இதையடுத்து விரைந்து செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட தி.மு.க மகளிர் அணியினர், இறந்த கர்ப்பிணியின் உடலைச் சொந்த ஊர் கொண்டுவர ஆம்புலன்ஸ், அவரின் உறவினர்கள் பயணிக்க வாகனம் மற்றும் ஊரடங்கால் இவர்கள் பயணிப்பதற்கு அனுமதிக் கடிதம் போன்ற அனைத்தையும் மிகவும் குறுகிய நேரத்திலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக பலருக்கும் உதவி செய்து வருகிறது தி.மு.க மகளிர் அணி. இவர்களின் செயல்களை பாராட்டி அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் எம்.பி கனிமொழி.