`ஊரடங்கு’ நேரத்தில் அனைவரும் வீட்டிலிருக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தீயணைப்புத் துறை, காவல் துறையினர் மட்டும் தங்களின் குடும்பங்களைப் பிரிந்து மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கொரோனாவை எதிர்த்துப் போர் புரிகிறார்கள். இவர்களின் தன்னலமற்ற சேவையை எப்படிப் பாராட்டினாலும் மிகையாகாது.
கொரோனா பாதித்தவர்களிடமிருந்து இருமல், தும்மல், தொடுதலால் மற்றவர்களுக்கும் கிருமி தொற்றும் என்கிறார்கள். அப்படியிருக்க, நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களைத் தொட்டுத் தூக்கி அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் சேவைக்கு இவ்வுலகில் எதையும் இணையாகச் சொல்லிவிட முடியாது. மனிதக் கடவுள்கள் என்றே மனித இனம் அவர்களைப் போற்றுகிறது.
இந்த நிலையில், மருத்துவம், சுகாதார சேவையைப் பாராட்டி கௌரவப்படுத்தியுள்ளனர் வாலாஜாபேட்டை மக்கள். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பெல்லியப்பா நகர்ப் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பிரிவு செயல்பட்டுவருகிறது. அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினரை கௌரவிக்கும் வகையில் அப்பகுதி மக்களும் தன்னார்வலர்களும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில், அவர்களை நாற்காலியில் அமர வைத்து கிருமி நாசினி மூலம் கால்களைச் சுத்தம் செய்தனர். பின்னர், மஞ்சள் குங்குமம் வைத்து பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினர். பொதுமக்களின் இந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் ஆனந்தக் கண்ணீரில் பூரிப்படைந்தனர்.