உலகம் முழுக்க கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் மக்களை காப்பாற்ற பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பொதுமக்களும் பல வகையான முகக்கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசம் பலன் தருமா…? என மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.
“கொரோனா குறித்து நாங்கள் ஊடகங்களிடம் வாயே திறக்கக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது அரசு என்றாலும் பொது நலன் கருதி சில விஷயங்களை பகிர்கிறேன்” என்று சொன்னவரிடம் முகக் கவசம் பலன் தருமா என்றோம்…?
“துணியால் தயாரிக்கப்பட்டு தற்போது கிடைக்கும் சாதாரண வகை முகக்கவசம் எந்த பலனையும் தராது” என பகீர் கிளப்பினார். மேலும் அவரிடம் பேசியதில் சில தகவல்களை பெற்றோம். “த்ரீ லேயர் மாஸ்க்’னு இருக்கு. அதை சர்ஜிகல் மாஸ்க்னு சொல்வோம். அதன் ஒரு பக்கமானது ஈரப்பதத்தை உறிஞ்சி தக்க வச்சுக்கும்., இதை ரெண்டுல இருந்து ஆறுமணி நேரம் வரைக்கும் யூஸ் பண்ணலாம். இடையில் கொஞ்சமா ஈரப்பதம் தெரிஞ்சாலும் நாம மாத்திக்கனும். யூஸ்வலா இது தான் சர்ஜரி செய்யும்போது மருத்துவர்கள் பயன்படுத்துவாங்க. இதனை பயன்படுத்துவது கொஞ்சம் பலனைக் கொடுக்கும்.” என்றவர் தொடர்ந்து N95 பற்றியும் கூறினார்.
“N95 மாஸ்க்னு ஒன்னு இருக்கு. அதை அணிவதற்கு சில முறைகள் இருக்கு, அதன் அளவுகளை சரிபார்க்கனும். ஊதி பார்க்கனும். அந்த மாஸ்க்கை காதுல எப்டி மாட்டனும் என சில வழிமுறைகள் இருக்கு. இதனையும் கூட ரெண்டு மணி நேரத்தில் இருந்து ஆறு மணி நேரம் வரை மட்டுமே பயன்படுத்தலாம். நோயாளி நேரடியாக முகத்துல வந்து தும்மாத வரைக்கும் பிரச்னை இல்லை. அந்த அளவுக்கு இந்த மாஸ்க் பாதுகாப்பானது.” என்றவரிடம் தயங்கியவாறே அப்போ அந்த துணி மாஸ்க் எல்லாம் யூஸ் இல்லையா என்று மீண்டும் கேட்டோம் “அதனால் எந்த பலனும் இல்ல., ரொம்ப சின்ன அளவில் ஒரு பாதுகாப்பு கிடைக்கலாம் அவ்ளோ தான்.” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM