நீலகிரி மாவட்டத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்றுவந்த 683 பேரை வீட்டுத் தனிமையில் வைத்து கண்காணித்துவருகின்றனர். ஏராளமான சுற்றுலாத்தலங்கள், மலை ரயில், கேரள, கர்நாடக எல்லை, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் என வெளி தொடர்புகளை அதிகம் கொண்டிருந்த நீலகிரியில் கொரோனா தொற்று அச்சம் சற்று அதிகமாகவே இருந்துவந்தது.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகளால் எந்தத் தொற்றும் ஏற்படாவண்ணம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட்டுவந்தது.
144 தடை உத்தரவுக்குப் பிறகு மேலும் கடுமையாக்கப்பட்டு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு நோய்த்தொற்று அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
நீலகிரி மாவட்டத்திலும் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 8 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி காந்தள் பகுதியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் இந்தப் பகுதியை முழுவதுமாக மூட உத்தரவிட்டார். இதன்படி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சாலைகளை அடைத்தனர். மேலும், இந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குன்னூர், கோத்தகிரி நகரின் முக்கியப் பகுதிகள் மூடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில் “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மூன்று பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த 8 நபர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மேலும் பல இடங்கள் முடக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகிவருகிறது. 144 தடை உத்தரவிலும் அலட்சியமாக இருந்த நீலகிரி மக்கள், தற்போது மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளால் உறைந்து போயுள்ளனர்.