உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் மிகப் பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாட்டு அரசுகளும் கடுமையாகத் திணறி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் தாய்லாந்து மன்னர் 20 பெண்களுடன் ஜெர்மனியில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1,651 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்த மோசமான சூழலில்தான் அந்நாட்டு மன்னர் மஹா வஜிரலொங்கோன் என்ற ராமா எக்ஸ், 20 பெண்களுடன் ஹோட்டலில் தஞ்சமடைந்துள்ளதாக ஜெர்மனியைச் சேர்ந்த Bild என்ற ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
Also Read: 100 நதிகளின் புனித நீர்; 5 அரசு சின்னங்கள்!- கோலாகலமாக நடந்த தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழா
ஜெர்மனியின் ஜூக்ஸ் ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் இருக்கும் மொத்த அறைகளையும் புக் செய்து அங்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மன்னரின் இந்தச் செயலால் தாய்லாந்து மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். மன்னர் ராமா எக்ஸின் நான்காவது மனைவி மன்னருடன் ஜெர்மனி ஹோட்டலில் உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரின் படை பரிவாரத்தில் இருக்கும் 119 பேர் தாய்லாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னர் தன் சொந்த நாட்டை விட ஜெர்மனியில்தான் அதிக நாள்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு அங்கு சொந்தமாக அரண்மனை போன்ற வீடு, சொத்துகள் இருப்பதாகவும் அவர் கடந்த பிப்ரவரிக்குப் பிறகு தாய்லாந்து மக்களைச் சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னரை விமர்சித்தால் சிறைத் தண்டனை வழங்கப்படும், இருந்தும் மக்கள் சமூக வலைதளங்களில் மன்னரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.