கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிலவரத்தைக் கணக்கில்கொண்டு, தமிழகத்தில் காலியாக உள்ள 334 ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு- 2 பணியிடங்களை நிரப்புவதில் அரசு தீவிரம்காட்டிவருகிறது. இதுகுறித்த அறிவிப்பை பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, `கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த அவசர கால தேவையைக் கருத்தில்கொண்டு, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு – 2 என்ற பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, புதியதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு எழுத்துத்தேர்வு கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்படும். இந்தப் பணிக்கான கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். அதேபோல், பன்னிரண்டாம் வகுப்பில், தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடப் பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஓராண்டு சுகாதாரப் பணியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு மாத ஒப்பந்தத்தின்கீழ் தற்போது பணி வழங்கப்படுகிறது. சுகாதார ஆய்வாளர் கிரேடு -2 பிரிவில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு, மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதாகத் தகவல் உள்ளது. அதேநேரத்தில், “தமிழக அரசு அனுமதியளித்த சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்காக 2 ஆண்டுகள் படித்தவர்கள் பலர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களை இந்தப் பணிக்குத் தேர்வு செய்யலாம்” என்கின்றனர் வேலைக்காகக் காத்திருப்பவர்கள்.