குமுளியில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, கேரள அரசு சார்பில் கம்யூனிட்டி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு மற்றும் சிற்றுண்டி கடைகள்அடைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்தப் பொது ஊரடங்கு காலத்தில் யாருக்கும் உணவு கிடைக்காத நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காகக் கேரள அரசு, மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 1,000 “கம்யூனிட்டி கிச்சன்”களை துவக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக, கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ஊராட்சி அலுவலக வளாகத்தில் கேரள அரசின் சார்பில் “கம்யூனிட்டி கிச்சன்” துவக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குமுளி ஊராட்சி மகளிர் சுய உதவிக்குழுவினரால் இந்தச் சமையலறை உணவு கூடத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இங்கு ஆதரவற்றோர், இயலாதோர் நேரடியாகச் சென்று உணவு உட்கொள்ளலாம். இதற்காக சமூக விலகலுடன் இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

அத்தோடு, குமுளி ஊராட்சியில் வார்டு வாரியாக ஆதரவற்றோர், இயலாதோர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரொனோ நோய்த் தடுப்பு வார்டு குழுக்கள் மூலம் “கம்யூனிட்டி கிச்சன்”னில் தயாரிக்கப்படும் உணவானது நேரடியாகக் கொண்டு சென்று வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குமுளி ஊராட்சி தலைவி ஷீபா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM