கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவர் கணவரும் சிரமப்பட்டு நடந்து வந்துள்ளனர். அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த சிங்காநல்லூர் தலைமைக் காவலர் புனிதவதி மற்றும் சிறப்பு போலீஸார் ஓடிச்சென்று அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
Also Read: `கொரோனா சிறப்பு அதிகாரிகள்!’ – பார் உரிமையாளரிடம் ரூ.20,000, 247 மதுப்பாட்டில்களைப் பறித்த நபர்கள்
பிறகு அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் பல்லடம் அருகே உள்ள கொடுமுடி என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதி என்று தெரியவந்தது. அந்தப் பெண்ணின் பெயர் மஞ்சுளா என்றும் அவர் கணவர் பெயர் விக்னேஸ்வரன் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் கூலி வேலை செய்பவர்கள், மஞ்சுளா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், உடல் நலப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
போக்குவரத்து பிரச்னையால் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிவிட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், சொந்த ஊருக்குச் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் திருச்சி சாலையில் நடந்து வந்துள்ளனர். அப்போது தலை சுற்றி கீழே விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் ஆய்வாளர் முனீஸ்வரனுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பிறகு ஆய்வாளரின் பரிந்துரைப்படி, ஆத்மா அறக்கட்டளை சார்பில் அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.