கொரோனா உள்ளதா என்பதைக் கண்டறிய ஒருவரது ரத்தம், சளி மாதிரிகளை சோதனை நடத்தி ரிசல்ட் வெளியாக 24 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள மாதிரிகள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா சோதனை நடத்தி 10 முதல் 30 நிமிடங்களில் ரிசல்ட் தெரிந்துகொள்ளும் ரேபிட் டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் கொரோனா வைரஸின் சமூகப் பரவல் குறையும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், “கேரள மாநிலத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பியவர்கள். புதிதாக வைரஸ் பாதித்ததில் 8 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 7 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். எர்ணாகுளத்தில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனை கருவி

கேரளத்தில் இதுவரை 202 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 11 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இப்போது 181 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரத்து இருநூற்று பதினொன்று பேர் (1,41211) தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 593 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரிசோதனையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் வழிகாட்டுதல்படி வேகமாக ரிசல்ட் வரும் வகையில் ரேபிட் டெஸ்ட் (rapid) நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்கிரீனிங் மூலம் கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி, தேவை என்றால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்.

எவ்வளவு வேகமாக சோதனை செய்ய முடியுமோ அவ்வளவு வேகத்தில் ரேபிட் டெஸ்ட் நடத்தப்படும். இதன் மூலம் வேறு உபகரணங்கள் இல்லாமல் 10 முதல் 30 நிமிடங்களில் முடிவு தெரியவரும். இதன்மூலம் அதிகம்பேரை சோதனை செய்ய முடியும், செலவும் மிகக்குறைவாகும்.

கே.கே.ஷைலஜா

இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்து உடனடியாக ரிசல்ட் அறிந்துகொள்ள ரேபிட் டெஸ்ட் உதவியாக இருக்கும். இந்த டெஸ்ட்டில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி, தேவை எனில் வேறு சில சோதனைகள் நடத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சமூகத்தில் வைரஸ் தொற்று வேகமாகப் பரவாமல் தடுக்க முடியும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.