கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலி ருந்து பரவிய இந்த வைரஸால், தற்போது 165 உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் கொரோனா வைரஸ் மிரட்டிவருகிறது. தற்போதுதான், இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள், கொரோனா வைரஸை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சீனாவைப் பொறுத்தவரை, வுஹான் நகரம்தான் அந்த நாட்டின் மருத்துவத் தலைநகரம். வுஹான் நகரைச் சுற்றிலும் 45 மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்குள்ள வைரலாஜி ஆய்வு மையத்தில், சீனா கொரோனா வைரஸை உருவாக்கி சேமித்து வைத்ததாகவும், ஆய்வு மையத்திலிருந்து தப்பிய கொரோனா, உலக நாடுகளில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா குறித்தோ, அதன் பரவல் குறித்தோ இந்திய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும் கொரோனா பரவி வருவதையடுத்து, டெல்லியிலுள்ள சீனத் தூதரகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”கொரோனா வைரஸை சீனா உருவாக்கவில்லை. உள்நோக்கத்துடன் அதை வெளிநாடுகளில் பரப்பவுமில்லை. ‘சீன வைரஸ்’ என்று அழைப்பது முற்றிலும் தவறு” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கின் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ”கொரோனா வைரஸ் வேண்டுமென்றே கசியவிடப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதமாக இருக்கலாம்; சீனாதான் அதை ஏவியதாக எதிர்மறையான கருத்தைக் கூறிவருகின்றனர். H1N1 வைரஸ், வட அமெரிக்காவில் இருந்துதான் உலகம் முழுக்க பரவியது. நாங்கள் ஒருபோதும் அதை வட அமெரிக்க வைரஸ் என்று அழைத்ததில்லை. பின்னர், H1N1 வைரஸுக்கு Influenza A என்று பெயரிடப்பட்டது. அதேபோல, கொரோனா வைரஸை சைனீஸ் வைரஸ் என்று அழைப்பது தவறானது. ‘எந்த ஒரு வைரஸையும் எந்த ஒரு நாட்டுடன் இணைத்து அழைக்கக்கூடாது’ என்று உலக சுகாதார நிறுவனம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
சைனீஸ் வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மட்டும்தான் கூறிவருகிறார். வேறு தலைவர்கள் யாரும் அவ்வாறு குறிப்பிடவில்லை. கோவிட்-19 என்பது ஒரு நாடு அல்லது தனிப்பட்ட நகரத்தின் மீது மட்டும் போர் தொடுக்கவில்லை. உலகத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளது. வுஹானை லாக்-டவுண் செய்தது அளவற்ற பலனைக் கொடுத்தது. சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளும் இதைப் பின்பற்றி, கோவிட்- 19 வைரஸ் பரவாமல் காத்துள்ளன.
‘கொரோனா தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை முதலிலேயே தெரிவித்திருக்கலாம் ‘என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்த வைரஸ் தாக்குதல் குறித்து வெளிப்படையாகவே சீன அரசாங்கம் நடந்துகொண்டுள்ளது. நோய் தொற்றுதல் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் உலக சுகாதார நிறுவனத்துடன் சீன அரசு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் மற்றும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள், கோவிட் -19 வைரஸின் தோற்றம் குறித்து குறிப்பிட்ட முடிவுக்கு வரவில்லை. சீனாவின் வுஹான் நகரம் முதலில் வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்ட போதிலும், கோவிட் -19 தோன்ற சீனாதான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
Also Read: `கொரோனா தொற்று; அரசக் குடும்பத்தில் முதல் உயிரிழப்பு’ – ஸ்பெயின் இளவரசி மரியா காலமானார்!
அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் மையம், 2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஒருவித தொற்று நோய் உலகில் பரவும். இதனால் 3 கோடி மக்கள் உலகம் முழுக்க பாதிக்கப்படுவார்கள். 20,000 மக்கள் பலியாவார்கள் என்று கணித்திருந்தது. ஒருவேளை அந்த நோய், கோவிட் 19 வைரஸாக இருக்கலாம். சீன மக்கள் ஏராளமானோர் தங்களை உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
Also Read: `இடைவிடாமல் எரியும் அடுப்பு; தினமும் 30,000 பார்சல்கள்!’ – இந்தியர்களால் நெகிழும் நியூயார்க்வாசிகள்
இந்தத் தருணத்தில், சீனாவைக் களங்கப்படுத்தும்விதத்தில் செயல்படக்கூடாது. இக்கட்டான சூழலில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டுள்ளன. சீனாவில் கோவிட்- 19 வைரஸ் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, இந்தியா 15 டன் அளவுக்கு கையுறைகள், மாஸ்க்குகள், மருத்துவ உபகரணங்களை அனுப்பி உதவியது. அந்த நன்றியை மறக்கவில்லை. இந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு உதவ சீன அரசு தயாராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.