கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், பெருமளவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில், லிங்க்டுஇன் நிறுவனம் இலவசமாக வேலை வாய்ப்புகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதன்மூலம், முக்கியமான வேலையாட்கள் தேவைப்படும் துறைகளான சுகாதாரம், சூப்பர் மார்க்கெட், வேர்ஹவுஸ் (warehouse) போன்றவற்றின் வேலைகளை இலவசமாகப் பட்டியலிட்டு வருகிறது.
Also Read: “மருத்துவம் முடியாது; ஆனா, தூய்மை பணியாளர்கள்கூட வேலை செய்யத் தயார்!” – சினேகன்
லிங்க்டுஇன் நிறுவனத்தின் இலவசத் திட்டம், ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜுன் 30-ம் தேதி வரை செயல்படும். இதைப் பயன்படுத்தி, நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முக்கியப் பணியாளர்களைக் குறுகிய காலத்தில் பெற முடியும். லிங்க்டுஇன் நிறுவனம், வேலை தேடுபவர்களுக்கு தங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும் வகையில் வழிவகைசெய்துள்ளது. இதனால் மருத்துவ வேலைகளான டாக்டர்,செவியலர்கள் போன்ற அவசர வேலைகளில் சேர்க்கப்படும். இந்த வேலைக்குத் தேவையான திறமை உள்ளவர்களுக்கு, லிங்டுஇன் மூலம் இந்த வேலை வாய்ப்பு பற்றி உடனே அறிவிக்கப்படும். மேலும், லிங்க்டுஇன் உறுப்பினர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற வேலைக்கான அறிவிப்பை மெயில் மூலமும் உடனடியாகப் பெற முடியும்.
இந்த அவசர கால வேலை அறிவிப்பில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்களைக் கையாளுதல், மனநலப் பராமரிப்பு சார்ந்த வேலைகள் உள்ளன. இவற்றோடு பல்பொருள் அங்காடிக்குத் தேவையான வேலையாட்கள் பற்றிய அறிவிப்பு, பொருள்களை டெலிவரி செய்ய தேவைப்படும் வேலையாட்களின் அறிவிப்பு போன்றவையும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி, வேலை கிடைக்காமல் இருக்கும் மக்கள் தங்களது திறமைக்கேற்ற வேலையைக் கண்டறிய முடியும்.
“தினமும் மக்களைப் பாதுகாக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வோர் மிகவும் பாடுபட்டுவருகின்றனர். ஆனாலும் அவசர கால தேவைக்காக இன்னும் அதிக வேலையாட்கள் தேவைப்படுகிறார்கள். இதைப் பூர்த்திசெய்யும் வகையில், திறமையானவர்களைக் கண்டுபிடிக்கவே இந்த இலவச வேலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். மேலும், இந்த வைரஸ் தொற்றை எங்கள் தரப்பிலிருந்து சமாளிக்க புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து வருகிறோம்” என லிங்க்டுஇன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் வேலையிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தியாவிலும் மக்கள் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சமயத்தில், வேலைக்கான அறிவிப்பை இலவசமாக வெளியிடும் லிங்க்டுஇன் நிறுவனத்தின் நற்செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.