இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தற்போது அம்மாநில அரசு சார்பில், கொரோனா சுயபரிசோதனையில் கண்டறியும் வகையிலான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. https://covid-19.maharashtra.gov.in/ என்ற அந்த இணையதளத்தை, `அப்போலோ 24×7′ செயலியுடன் இணைந்து மகாராஷ்டிரா அரசு உருவாக்கியுள்ளது.
இந்த இணையதளத்தில் பல கட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, பெறப்படும் பதில்களின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா அபாயம் உள்ளதா என்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. வயது, பாலினம், உடல் வெப்பநிலை போன்ற அடிப்படைக் கேள்விகள் முதலில் இடம்பெறுகின்றன. பின்னர் கொரோனாவின் அறிகுறிகளான சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை பற்றி கேட்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட நபரின் பயண வரலாறு, நோய்த்தொற்று இருந்தவரிடம் பழகியிருக்கிறாரா போன்ற முக்கியக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதோடு இதர நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய் பாதிப்புகள் இருக்கின்றனவா என்றும் கேட்கப்படுகிறது.
இவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்களின் அடிப்படையில், அந்த நபர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவரை அணுக வேண்டிய தேவை ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. இவற்றோடு, கொரோனா சமயத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, உதவி எண்கள் ஆகிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி மகாராஷ்டிரா அரசு அதிகாரி, `இதன் மூலம் கொரோனாவின் தாக்கம் ஒருவருக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகளை மருத்துவரிடமிருந்து தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலமாகப் பெறும் வகையிலும் இந்தக் கருவியை மேம்படுத்தும் திட்டம் உள்ளது’ என்று கூறியிருக்கிறார்.