China: ஈபிள் டவரை விட உயரமான பாலம்; 24,000 கோடியில் கட்டப்பட்ட அதிசயம்!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட சீனா பல கட்டடக்கலை அதிசயங்களை உருவாக்கி வருகிறது.

இப்போது உலகின் மிக உயரமான பாலத்தைக் கட்டி சாதனைப் படைத்துள்ளனர். ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் (the Huajiang Grand Canyon Bridge) என அழைக்கப்படும் அந்த பாலம் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் மேல் 3 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இது பாரீஸின் ஈபிள் டவரை விட 200 மீட்டர் அதிக உயரத்தில் அமைந்துள்ளது.

24,000 கோடி மதிப்பு!

சீனாவின் இந்த கட்டடக்கலை அதிசயம் வரும் ஜூலையில் திறக்கப்படவுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில், 24,000 கோடி என்கிறது தி மெட்ரோ தளம்.

ஜாங் ஷெங்லின் என்ற சீன அரசியல் தலைவர் இந்த பாலம் பற்றி பேசுகையில், இது சீனாவின் பொறியியல் சக்தியை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதுடன், மற்றுமொரு உலகத்தரமான சுற்றுலாத்தளத்தை உருவாக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்த பாலத்தை உருவாக்க கிட்டத்தட்ட 22,000 மெட்ரிக் டன் இரும்பு பயன்படுத்தியுள்ளனர். இது ஈபிள் டவரை உருவாக்கப் பயன்படுத்தியதை விட 3 மடங்கு அதிகம்.

சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம்

தான் தினம் தினம் வளர்த்தெடுத்த பாலம், மிகவும் உறுதியானதாக எழுந்து நிற்பதைப் பார்க்க பெருமைதயாக இருப்பதாக இந்த திட்டத்தின் முதன்மை பொறியாளர் லி ஜாவோ தெரிவித்துள்ளார்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உயரமான கண்ணாடி பாலத்தையும், உலகிலேயே உயரமான பிஞ்சி ஜம்ப்பிங்கையும் அனுபவிக்கலாம் என்க் கூறியுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகளின் பயணத்துக்கும் இது உதவும் என்கின்றனர். தினசரி 4 மணிநேர பயணத்தை 1 மணி நேரமாக குறைக்கும் என்கின்றனர்.

இதேப்போல சீனா உலகின் மிகப் பெரிய அணைக்கட்டையும் உருவாக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. யார்லுங் சாங்போ ஆற்றின் மீது அமையும் அந்த அணையின் மதிப்பு லட்சம் கோடிகளைத் தொடும் எனக் கூறப்படுகிறது.