DMK: பொன்முடி நீக்கம்; துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம் – மு.க.ஸ்டாலின் அதிரடி

தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியை அவர் வகித்த கட்சி பதவியில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமை கழகம்.

பொன்முடி பேச்சுக்கு கண்டனம்

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ வைரல் ஆனது. பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து கொச்சையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோ வேகமாக பரவ, பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சொந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா எம்.பி

கனிமொழியின் பதிவு

பொன்முடியின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பும் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ‘ஓசி டிக்கெட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இவரது சர்ச்சை பேச்சுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே வருகின்றன.

துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா

இந்த நிலையில், தற்போது பொன்முடியை கழக துணைப் பொதுச்செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமைக் கழகம்.

பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை துணை பொதுச்செயலாளராக நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.