பாமக: `முகுந்தன் டு கூட்டணி நிலைப்பாடு’ முற்றிய வாக்குவாதம் – அன்புமணி பதவி பறிக்கப்பட்ட பின்னணி?

அன்புமணி vs ராமதாஸ்

மினி ஃப்ளாஷ் பேக்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ், “அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்.

அன்புமணி, முகுந்தன்

களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி. அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.” என்றார்.

அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி. பொதுக்குழு கூட்ட மேடையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸும், அன்புமணியும் கருத்து மோதலில் ஈடுபட்ட நிகழ்வு அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதையடுத்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் விளைவாக, கடந்த 2024 டிசம்பர் 29-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி. அதன்பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “கட்சியின் வளர்ச்சி, தேர்தல் திட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து மருத்துவர் ஐயாவிடம் விவாதித்தோம்.

பொதுக்குழுவில் நேற்று நடந்தது எங்கள் கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. எங்கள் கட்சிப் பிரச்னை குறித்து நாங்கள் பேசிக் கொள்கிறோம். பா.ம.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், அதில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அது குறித்து யாரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸ்

`எங்களுக்கு எல்லாமே, எப்போதுமே ஐயாதான்’

அதையடுத்து பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “எங்களுக்கு எல்லாமே, எப்போதுமே ஐயா ஐயாதான்” என்று கூறினாரே தவிர, பொதுக்குழுவில் நடந்தது குறித்தோ, முகுந்தனின் நியமனம் குறித்தோ எதையும் பேசவில்லை. அதனால் முகுந்தனின் நியமனம் நீடிக்குமா, அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்குள் குழப்பம் நீடித்தது. பனையூரில் இருக்கும் தனி அலுவலகம் வந்து என்னை சந்திக்கலாம் என்று அன்புமணி அறிவித்ததால், எந்தப் பக்கம் செல்வது என்று தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

கொளுத்தி போட்ட ராமதாஸ்

இந்த சூழலில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “பா.ம.க பொதுக்குழுவில் நடைபெற்றது எங்கள் உள்கட்சி விவகாரம். பா.ம.க இளைஞரணி தலைவர் முகுந்தன்தான். அதை பொதுக்குழுவில் அறிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் அவரிடம் வழங்கி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அன்புமணியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரிடம் பேசி அது சரி செய்யப்பட்டு விட்டது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், அன்புமணி செயல் தலைவராக நீடிப்பார் என்றும், பா.ம.க-வுக்கு இனி நானே தலைவர் என்றும் அறிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். இந்த அதிரடி முடிவின் பின்னணி குறித்து தைலாபுரம் தோட்டத்தில் சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, “முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்ததில் அன்புமணிக்கு ஆரம்பத்தில் இருந்தே உடன்பாடில்லை. அதேபோல கட்சிக்குள் அன்புமணி தன் குடும்பத்தை முன்னிறுத்துவதை ராமதாஸ் விரும்பவில்லை.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

முகுந்தன் இளைஞரணி தலைவராக நீடிப்பார் என்று ராமதாஸ் அறிவித்த பிறகும், அன்புமணி அவரை பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 6-ம் தேதி தேர்தல் கூட்டணி தொடர்பாக தோட்டத்தில் முன்னணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் ராமதாஸ்.

அப்போது, `முகுந்தனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அன்புமணி சொல்ல, அதற்கு, `என்னாலும்தான் நீ முன்னுரிமை கொடுக்கும் குடும்ப ஆட்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று சீறியிருக்கிறார் ராமதாஸ். தொடர்ந்து, `பெயரளவுக்குத்தான் நான் தலைவராக இருக்கிறேன். ஆனால் கட்சியில் ஒரு சிறு பதவி நியமனத்தைக் கூட என்னால் செய்ய முடியவில்லை.

கட்சிப் பொறுப்பில் யார் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை, தொண்டர்களைப் போல லெட்டர் பேடில் பார்த்துதான் நானே தெரிந்து கொள்கிறேன். அதில் கூட நீங்கள்தான் கையெழுத்து போடுகிறீர்கள். அப்புறம் அந்த தலைவர் பதவி எனக்கு எதற்கு… நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஆவேசமாக பேசினார். அதேபோல சென்னை வரும் அமித் ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது அன்புமணியின் நிலைப்பாடு. ஆனால் ராமதாஸுக்கு அதில் விருப்பம் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விட, அதிமுக-வுடன் கூட்டணி வைப்பதையே விரும்புகிறார். அந்த கூட்டணியில் பாஜக இணைந்தால் பிரச்னை இல்லை என்பது ராமதாஸ் நிலைப்பாடு” என்கின்றனர்.

 இந்த தொடர் கருத்து மோதலின் பின்னணியில் தான் தற்போது ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அந்த பொறுப்பை தன் கையில் எடுத்து இருக்கிறார் என்கிறார்கள். இதில் அன்புமணி எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.!