போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்கு பிரபலமானவர்.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இசைச் கச்சேரி நடத்தியுள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது.

ஜான் ஜெபராஜின் மாமனார் ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஜெபராஜ் கடந்த 2024 மே 21-ம் தேதி தன் வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஜெபராஜின் மாமனார் அதற்கு அந்த 17 வயது சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் தொந்தரவு

மேலும் அந்த சிறுமியின் தோழியான 14 வயது சிறுமி ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மதபோதகர் ஜெபராஜ் இரண்டு சிறுமிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பயந்து போன சிறுமிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த பாலியல் தொல்லை குறித்து சிறுமிகள் உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர்களின் நடவடிக்கையை பார்த்து உறவினர் ஒருவர் பேசியபோது அதில் ஒரு சிறுமி பாலியல் சீண்டல் குறித்து கூறியுள்ளார். அவர்கள் மூலம் இந்த தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டது.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் (மத்திய) காவல்நிலையத்தில் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜெபராஜை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.  

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel