“டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்” – சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராசனின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விளார் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம், “சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. நீங்கள் தான் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். அனைவரும் ஜெயலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள்தான்.

ம.நடராசன் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன்

ஆளும் கட்சியின் அவலங்கள்

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. காவல் துறையை சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. இவை ஆளும் கட்சியின் அவலங்கள். விவசாயிகள், அரசு ஊழியர்கள் சாலையில் போராடி வருகின்றனர். விலைவாசி உயர்வில் அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் கட்சி, திராவிட மாடல் ஆட்சி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் பல மொழிகளை படிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அண்ணா, ஆட்சிக்கு வந்ததும் இந்தியா முழுவதும் இணைப்பு மொழி, பொதுவான மொழி உருவாக வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

டாஸ்மாக் விவகாரம்: இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்

திமுக ஆட்சியில் முறைகேடுகள், ஊழல்கள் நடக்கிறது. டாஸ்மாக்கில் 20 சதவீதம் மட்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தமிழக அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்னையில் பாஜகவுடன் கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி இணைந்து போராட உள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.

ம.நடராசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் டி.டி.வி.தினகரன்

ஊழல்வாதி செந்தில் பாலாஜி குறித்து திமுக பரிந்து பேசுகிறது. இதில் பேசுவது ஒன்று செயல்படுவது ஒன்று என்கிற திமுகவின் இரட்டை செயல்பாடு வெளியே வருகிறது.

தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கு காரணமான கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், சோனியா காந்திஆகியோருடன் எடுத்துக் கூறி தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மேற்கொள்ளவில்லை.

மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் ஸ்டாலினின் உண்மை முகம் தெரிகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்குத் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கௌரவம் பார்ப்பது சரியாக இருக்காது. திமுகவை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel