கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல்தான் தற்போது உலக அரங்கில் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக். இப்போது பலராலும் விமர்சிக்கப்படும், குறை சொல்லப்படும் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காலத்தில், கனடா நாட்டு மக்களின் ‘செல்லப்பிள்ளை’.
யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ?
கனடா நாட்டின் 23வது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. 1971 ஆம் ஆண்டில் பிறக்கும்போதே இவருக்கும், கனடா நாட்டு அரசியலுக்கும் தொப்புள் கொடி உறவு உருவாகிவிட்டது. இதற்குக் காரணம், ட்ரூடோ பிறந்தபோது அவரது தந்தை கனடா நாட்டுப் பிரதமர்.
1994 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர், தொடக்க வாழ்க்கையின் போது பிரெஞ்சு, கணிதம் உள்ளிட்ட பாடங்களைச் சொல்லித்தரும் ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். இத்துடன் ட்ரூடோ நைட் கிளப் பவுன்சராகவும், ஸ்நோ போர்ட் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.
அரசியலுக்குள் வருவதற்கு முன்னாள் கனடா நாட்டின் அறக்கட்டளை ஒன்றின் தலைவர் பொறுப்பிலிருந்துள்ளார். ஆசிரியராகப் பணியாற்றி உள்ள இவருக்கு, இயல்பிலேயே பேச்சுத்திறனும், இளைஞர்களை ஈர்க்கும் திறனும் இருந்தன. இதனால், அப்போது இவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்தும், சமுதாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அரசியல் என்ட்ரி
தனது 35 வயது வரை, அரசியல் பக்கம் எட்டிப் பார்க்காத இவர், 2007 ஆம் ஆண்டு அரசியல் பிரவேசம் செய்தார். 2007 ஆம் ஆண்டு, மான்ட்ரியல் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட ஆதரவைத் திரட்டினார்.
அவருக்கு ஆதரவு அமோகமாகப் பெருக, மான்ட்ரியலில் 2008 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அதே மான்ட்ரியலில் 2011, 2015, 2019, 2021 என நான்கு தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
2013-ம் ஆண்டு, லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், நடுத்தர மக்களை மேம்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரசாரங்களை முன்னெடுத்தார்.
இளம் பிரதமர்…
எதிர்க்கட்சிக்காரர்களின் ‘சின்ன வயசுக்காரர்’ என்கிற விமர்சனங்களுக்கு மத்தியில், தீவிரமான பிரசாரங்களுக்குக் கை மேல் பலனாக 2015 ஆம் ஆண்டு, கனடா முழுவதும் பெரும்பான்மை வெற்றி பெற்று கனடா பிரதமராகப் பொறுப்பேற்றார் ட்ரூடோ. தனது 43-வது வயதில் பிரதமராகப் பதவியேற்ற ட்ரூடோ கனடா நாட்டின் இரண்டாவது இளம் பிரதமர் என்று பெருமையைப் பெற்றார்.
கனடா நாட்டின் முதல் இளம் பிரதமர் 1979 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற கிளார்க் ஆவார். அப்போது அவரது வயது 39.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2019, 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த கனடா நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று இவரே பிரதமராகத் தொடர்ந்து வந்தார். இனி வரும் கனடா நாடாளுமன்றத் தேர்தலிலும் இவரே பிரதமராகப் போட்டியிடப்போவதாகக் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
பிரதமராகப் பதவியேற்று 10 ஆண்டுகளாக முடிவுறவுள்ள நிலையில், நேற்று தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி உள்ளார் ட்ரூடோ.

2015-ம் ஆண்டு…
2015 ஆம் ஆண்டு அவ்வளவு எளிதான காலகட்டமாக இருக்கவில்லை. அப்போது கனடாவின் பொருளாதாரம் சரியில்லை. கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறி வந்தது.
அப்போது தான், முதன்முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். மேலும், அவர் வட அமெரிக்காவிலுள்ள பிற நாடுகளுடன் இருக்கும் சில வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாகவும் பேசி வந்தார்.
ட்ரூடோவின் சாதனைகள்
இந்த நிலையில்தான், ட்ரூடோ முதல்முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். ட்ரூடோவின் முதல் அமைச்சரவையில் சம எண்ணிக்கையிலான ஆண் உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களும் இருந்தனர்.
மேலே கூறிய அனைத்து பிரச்னைகளைக்கும் சரியான தீர்வுகளைக் கொண்டுவந்து ‘யார் இவர்?’ என்று ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் ட்ரூடோ… உலக அரங்கில் கனடாவின் முகமாகவே மாறினார் ட்ரூடோ.

2019-ம் ஆண்டு…
இந்தியா மட்டுமல்ல… உலக நாடுகள் அனைத்திலும் ஊழல் என்ற சொல்லும், செயலும் இல்லாமல் இருக்காது போலும். 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடப்பதற்கு முன்பு, ட்ரூடோவின் சொந்த தொகுதியான மான்ட்ரீயலில் நடந்த பெரிய ஊழல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, அவரது ஆட்சி கொஞ்சம் ஆட்டம் கண்டது. இருந்தும், 2019 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு அளவுக்கு இல்லையென்றாலும், பெரும்பான்மை பெற்று ட்ரூடோ வென்று பிரதமராகத் தொடர்ந்தார்.
கொரோனா கொடுத்த தடுமாற்றம்
2020 ஆம் ஆண்டு வந்த கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பெரும் ஆட்டத்தைக் கண்டது. இதில் கனடா மட்டும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே, அரசுக்கு உள்ள அவப்பெயரைச் சரிசெய்ய, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்குச் சலுகைகளை அள்ளி தெளித்தார் ட்ரூடோ. இதனால், கனடாவின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது.
2021 ஆம் ஆண்டு அவரே மீண்டும் இடைத்தேர்தலைக் கூட்டிப் போட்டியிட்டார். ஆனால், அவர் நினைத்த பெரும்பான்மை கிடைக்காமல் வெற்றி மட்டும் பெற்றார். ஆனால், முக்கியமான தொகுதிகளில் இவரது கட்சி தோற்றது.
அதுமட்டுமில்லாமல், கொரோனா பேரிடரின்போது ட்ரூடோ அரசு கொண்டு வந்த சட்டதிட்டங்கள், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி 2022 ஆம் ஆண்டு நாட்டின் முக்கிய இடங்களில் பெரிய போராட்டங்கள் நடந்தன.

பொருளாதார பிரச்னை
கொரோனா பேரிடரின்போது கொண்டு வந்த திட்டங்களால், கனடா பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. சப்ளை செயின் பாதிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதம் உயர்வு என மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில், கனடாவின் மத்திய வங்கி கனடா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிகமான வட்டி உயர்வைக் கொண்டுவந்தது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
பொருளாதார பிரச்னைகள், ட்ரூடோ கொண்டுவந்த திட்டங்கள் என ஒவ்வொன்றாக ட்ரூடோவிற்கு எதிராகத் திரும்பி, மக்கள் மத்தியில் அதிருப்தியாகக் கிளம்பியது. மேலும், ட்ரூடோவுக்கும், கட்சியினருக்கும் இடையிலுமே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதற்கு, கடந்த மாதம் ட்ரூடோவின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து அவருடைய துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான கிறிஸ்டி ஃப்ரீலேண்ட் பதவி விலகியதே சிறந்த உதாரணம்.
ட்ரூடோ – இந்தியா உறவு
உலக அரங்கில் எப்போது ட்ரூடோ பிரபலமாக ஆரம்பித்தாரோ, அப்போதே இந்தியாவிலும், இந்திய மக்கள் இடையிலும் பிரபலமானவராக மாறினார் ட்ரூடோ. 2018-ம் ஆண்டு, ட்ரூடோ இந்தியாவிற்கு வந்தபோது, அவருக்குப் பலத்த வரவேற்பு இருந்தது.
இந்தியர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் ஒன்று, கனடா. மேலும், கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு உரிய மரியாதை கொடுத்த கனடா பிரதமர்களில் ட்ரூடோ முக்கியமானவர். தமிழ்நாட்டினருக்கு ட்ரூடோ மீது தனி பாசம் உண்டு என்றே சொல்லலாம். ஒவ்வொரு பொங்கலுக்கும் கனடா தமிழர்களுக்கு ட்ரூடோவிடம் இருந்து வாழ்த்து மிஸ் ஆகாது.
இப்படி உணர்வு ரீதியாகவும், பண்டிகை ரீதியாகவும் இந்தியர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்திருந்தார் ட்ரூடோ.

நிஜ்ஜார் கொலை
இவை அனைத்துமே ஒரே கொலையில் சிதறத் தொடங்கிவிட்டன. காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருக்கிறது என்று ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், இந்தக் கொலையில் இந்தியப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கனடாவில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள்தான் காரணம் என்றும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் மறுத்தது. இது இந்திய – கனடா உறவில் விரிசலாக விழுந்தது. இந்த விரிசல் 2023-ம் ஆண்டு ட்ரூடோ இந்தியா வந்தபோதே நன்கு வெளியே தெரிந்தது.
இந்தியா குற்றச்சாட்டிற்கான ஆதாரம் கேட்டபோது முதலில் ‘அப்படி எதுவும் இல்லை’ என்று பதிலளித்த ட்ரூடோ, பின்னர், ‘இருப்பதாக’ கூறினார்.
ட்ரூடோவின் செய்கையினால் இந்தியா – கனடா உறவில் விரிசல் உண்டானது பெரும்பாலான கனடா மக்களுக்குப் பிடிக்காமல் போனது. இதுவும் மக்கள் ட்ரூடோ மீது அதிருப்தி கொண்டதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
அடுத்து என்ன?
இப்போது ட்ரூடோ பதவி விலகிவிட்டார். அடுத்த பிரதமராக உள்ள ரேஸில் முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தற்போதைய சர்வதேச விவகாரங்கள் அமைச்சர் டாமினிக் லீ பிளாங்க், கனடா மற்றும் இங்கிலாந்து வங்கிகளின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னே, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பியர் பொய்லிவ்ரே ஆதரவுகள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது. யார் அடுத்த பிரதமரானாலும், இந்தியாவுடனான உறவில் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதைப் பொறுத்துத் தான் இந்தியா – கனடா உறவு அமையும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs