அமெரிக்காவின் 1977 முதல் 1981 வரை 39வது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் தன் நூறாவது வயதில் நேற்று (டிசம்பர் 29) காலமானார். இவரின் பதவிக் காலத்தில் 57 சிறுபான்மை நீதிபதிகளையும், 41 பெண் நீதிபதிகளையும் கூட்டாட்சி நீதித்துறைக்கு நியமித்தார். அமைச்சரவையில் பணியாற்றும் முதல் கறுப்பினப் பெண் பாட்ரிசியா ராபர்ட்ஸ் ஹாரிஸை நியமித்த பெருமைக்குரியவர். அதிபர் பதவிக்குப் பிறகு சர்வதேச மனிதாபிமானப் பணிகளுக்காக, அவருக்கு 2002-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவரின் ஆடம்பரமில்லா வாழ்க்கை முறை வெகுவாக கவனம் பெற்றது. இவர் பதவியேற்ற 1977-ல் இந்தியாவில் எமெர்ஜென்ஸி முடிந்து ஜனதா கட்சி ஆட்சியமைத்தது. அப்போது இந்தியாவுக்கு வரும் மூன்றாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையுடன் இந்தியா வந்திறங்கினார் ஜிம்மி கார்ட்டர். ஜனவரி 2, 1978-ல் இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை இந்தியளவில் கவனம் பெற்றது. அவரின் உரையில், ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் உறுதியாக வலியுறுத்தி சர்வாதிகாரத்தைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார்.
இந்த நிகழ்வுக்கு அடுத்த நாள், ஜிம்மி கார்ட்டரும் அப்போதைய பிரதமருமான மொரார்ஜி தேசாய் டெல்லி பிரகடனத்தில் கையெழுத்திட்டு, இந்தியா – அமெரிக்காவிற்கிடையிலான உறவுகளை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லிக்கு அருகில் இப்போது ஹரியானா மாநிலத்தில் இருக்கும் தௌலத்பூர் நசிராபாத் கிராமத்திற்குச் சென்றார். 1960-களில், ஜிம்மி கார்ட்டரின் தாயார் லில்லியன் கார்ட்டர், அந்த கிராமத்தில் இந்திய அமைதிப் படையின் தன்னார்வலராக்க பணியாற்றியிருக்கிறார்.
அதனால், அந்த கிராமத்துக்கு ஜிம்மி கார்ட்டர் தன் மனைவி ரோசலினுடன் சென்றார். அவரை ஆரவாரத்துடன் வரவேற்ற அந்தக் கிராமவாசிகள், ஜிம்மி காட்டர் மீதும் அவரின் மனைவி மீதும் அன்பைக் கொட்டி திகைக்க வைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை காட்டர்புரி என மாற்றிக் கொண்டது. ஜிம்மி கார்ட்டருக்கு 2002-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கியபோது ஒட்டுமொத்த காட்டர்புரியே கொண்டாட்டத்தில் திளைத்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MaperumSabaithanil
