இந்தியாவின் 28 மாநில சட்டமன்றங்கள், 3 யூனியன் பிரதேசங்களின் தற்போதைய முதலமைச்சர்களின் (2024) சொத்து மதிப்பை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகியவை கடந்த தேர்தலில் போட்டியிடும் முன் 31 முதல்வர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில், மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UT) ஒரு முதலமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு 52.59 கோடி ரூபாய். பத்திரிகை தகவல் பணியகத்தின் (Press Information Bureau) படி, இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் 2023 – 2024 நிதியாண்டில் தோராயமாக ரூ.1,85,854. இதனுடன் ஒப்பிடும்போது, ஒரு முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் ரூ.13,64,310. இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம்.
இதில், இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலின் முதல் இடத்தில், தெலுங்கு தேசக் கட்சியின் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு (ரூ 931 கோடி), இரண்டாம் இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் பா.ஜ.க முதல்வர் பெமா காண்டு (ரூ332 கோடி), மூன்றாம் இடத்தில் கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா (ரூ.21 கோடி) ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருப்பவர்களில் மூன்றாவது இடத்தில் கேரளாவின் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் (ரூ 31 லட்சம்), அதற்கு அடுத்த இடத்தில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லா (55 லட்சம்), முதல் இடத்தில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜி (ரூ.15 லட்சம்). இதில் இந்தியாவின் 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி. தமிழ்நாடு முதல்வரின் சொத்து மதிப்பு 8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுதவிர, மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆய்வு செய்யப்பட்ட 31 முதல்வர்களில், 13 (42%) முதல்வர்கள் தங்களுக்கு எதிராக (கொலை முயற்சி உட்பட கடுமையான) கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர். 10 (32%) முதல்வர்கள் கடத்தல், லஞ்சம், கிரிமினல் மிரட்டல் போன்ற வழக்குகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.