“கொண்டாடி கொண்டே இருப்போம்” – திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!

திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டுபாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டாம் நாளான இன்று திருவள்ளுவர் காட்சி கூடத்தை திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முக்கடல் சூழும் குமரிமுனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு, முத்தமிழறிஞர் வைத்த சிலையினை போற்றகூடிய வகையில் வெள்ளிவிழாவினை திராவிட ஆட்சியில் நான் நடத்திவைப்பதில் நான் பெருமையடைகிறேன், பூரிப்படைகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் என் வாழ்நாளின் சிறந்த நாளாகா தமிழின் பெருமையை, குறளின் பெருமையை இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்லும் கடமை நிறைவேற்றியதாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிலையை திறந்து வைக்கும் நேரத்தில் பெத்தானை அழுத்தக்கூடிய கலைஞர், தன் உடல் நடுங்குவதாக சொன்னார். அந்த அளவுக்கு அவர் உணர்ச்சிப்பெருக்கில் இருந்தார். வான்புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்பது அவரின் நெடுங்கனவு.

அந்த கனவு நனவாகும் மகிழ்ச்சியால் அவருக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. இன்று இந்த சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுவது எனக்கும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பை உருவாக்கி தந்துவிட்டு போயிருக்கிறார் என்பதுதான் அந்த பெருமைக்கு காரணம். பொதுவாக குடும்பங்களில் உங்கள் அப்பா என்ன வைத்துவிட்டு போனார் என சாதாரணமாக கேட்பார்கள். என்னைக்கேட்டால் தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி கலைஞர் செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்காக செய்தாரா. அப்படியென்றால் யாருக்காக செய்தார். தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும், தமிழகத்துக்கும் அவர் உருவாக்கித்தந்த சொத்துகள் இதெல்லாம். என்னைப்பொறுத்தவரையில் அறவழியில் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைக்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு.

திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னதும் அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என நான் சொன்னேன். சிலை அமைத்ததற்கு எதற்காக விழா நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது உள்ளர்த்தம் இருக்கிறது. அவர்களுக்கு பதிலுக்கு பதில் சொல்லுவது தேவையில்லை. ஆனால், நான் உங்ளுக்கு சொல்லிக்கொள்வது. திருவள்ளுவர் தமிழர்களுக்கு மிகப்பெரிய உலக அடையாளம், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம். கொண்டாடுவோம், கொண்டாடிக்கொண்டே இருப்போம்.

ஐம்பெரும்விழா…

இன்று நடைபெறுவது ஐம்பெரும்விழா. ஐயன் திருவள்ளூவர் சிலை வெள்ளிவிழா, திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் சிலையையும் இணைக்கின்ற கண்ணாடி இழை பாலம் திறப்புவிழா, வெள்ளிவிழா மலர் வெளியீடு, திருக்குறள் கண்காட்சி, ஐயன் திருவள்ளுவர் தோரண வாயில் அடிக்கல் நாட்டுவிழா. நேற்று திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைக்ககூடிய 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை திறந்துவைத்தேன். இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

`திருக்குறளை நெஞ்சில் தூக்கி சுமந்த இயக்கம்..’

தமிழரின் அடையாளமாக சுனாமியை எதிர்த்து உயர்ந்து நிற்கின்ற வள்ளுவர் சிலைதான் நம் அடையாளத்தின் பண்பாட்டு குறியீடு. திருக்குறளையும், திருவள்ளுவரையும் சொல்லிலும், செயலிலும், நெஞ்சிலும் தூக்கி சுமந்த இயக்கம் திராவிட இயக்கம். சமத்துவத்தை சொன்னதால் பெரியார், `நம் மதம் குறள் மதம், நம் நெறி குறள் நெறி’ என்றார். குறள் மாநாடு நடத்தி திருக்குறள் புத்தகத்தை குறைந்த விலைக்கு அச்சிட்டுக்கொடுத்தார் அறிஞர் அண்ணா. குறள் என்பது வகுப்பறை மட்டும் அல்லாது, உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பரவ வேண்டும் என்றார் அண்ணா. கலைஞர் திருக்குறள் தலைவராகவே வாழ்ந்தார், வலம் வந்தார். கலைஞர் பள்ளிச்சிறுவனாக இருந்தபொது முதன் முதலாக பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டபோது நட்பு என்ற தலைப்பில் பேசியபோதும் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். அப்போது இருந்து குறள் ஆசான் வள்ளுவருக்கும், தமிழ் குரலோன் கலைஞருக்கும் வாழ்நாள் முழுவதும் நட்பு இருந்தது. வள்ளுவத்தை போற்றும் தொண்டு இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படத்தை திறக்க வைத்தவர் கலைஞர். போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனதும் எல்லா போக்குவரத்துகழக பேருந்துகளிலும் திருக்குறளை எழுதினார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து அரசு விடுதிகளிலும் வள்ளுவர் படம் அமைத்து திருக்குறளும் எழுதினார்.

வானுயர சிலையின் வரலாறு…

மைலாப்பூரில் திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் திருவள்ளுவர்கோட்டம், குறளோவியம் தீட்டினார், திருக்குறக் உரை இயற்றினார். இப்படி திருக்குறளாகவே வாழ்ந்தார் அவர். இந்த சிலை சாதாரணமாக வைக்கப்படவில்லை. இதற்கென்று தனி வரலாறு இருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என 31.12.1975 அன்று அமைச்சரவையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். 1990-ம் ஆண்டு சிலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தொடர்ந்து தடைகள் ஏற்பட்டது. 1997-ம் ஆண்டுதான் துரிதமாக பணிகள் நடைபெற்றது. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கோட்டம், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் அமைத்த கணபதி ஸ்தபதிதான் திருவள்ளுவர் சிலை அமைக்கும் கலைஞரின் கனவை நனவாக்கினார். கணபதி ஸ்தபதியின் தந்தைதான் சென்னையில் காந்தி மண்டபத்தை அமைத்தார். இந்த சிலையை பற்றி சொல்லவேண்டும் என்றால் திருக்குறள் அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பொருளும், இன்பமுமாக 95 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளது.

சிற்பக்கலை மரபு..

தலையில் தூக்கி முடிந்த கொண்டையை மகுடமாகக்கொண்டு, இடுப்பில் பட்டாடையும், மார்பில் மேல்துண்டும், வலது கையானது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலை காட்டும் விதமாக மூன்று விரல்களாகவும், இடது கையில் ஓலைச்சுவடிகள் இருப்பதுபோன்று அமைத்திருக்கிறார் கணபதி ஸ்தபதி. 7000 டன் எடைகொண்ட சிலை, 3681 கற்களால் சிலை அமைந்துள்ளது. இந்த கற்களை கொண்டு ஒரு சிலையை உருவாக்கி அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பதுதான் சிலையின் பெருமை. 133 அடி உயர சிலை அமைக்க 180 அடிக்கு சாரம் கட்டி சிலை அமைத்தார்கள். 500 சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். தஞ்சை பேரரசன் ராஜராஜ சோழன் அன்று கண்ட சிற்பக்கலை மரபை ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரிடத்தில் காண்கிறேன் என கணபதி ஸ்தபதி சொன்னார். உலக வாழ்க்கை சிற்பியாம் வள்ளுவருக்காக உருவாக்கிய சிலைக்கு நாம் வெள்ளிவிழா கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

வெள்ளிவிழாவை முன்னிட்டு அறிவுப்புகள்…

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு சில அறிவுப்புகளை வெளியிடுகிறேன். இங்கிருந்து சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை சென்றடைய 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். அதில், முதல் படகுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், 2-ம் படகுக்கு தென்குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடி சாதனை புரிந்த சாதனையாளர் மார்ஷல் நேசமணி பெயரும், 3-ம் படகுக்கு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பெயரும் சூட்டப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வம் மிக்க ஆசிரியர்கள் பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கி மாவட்டம் தோறும் தொடர் பயிலரங்கம், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக மாவட்டம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கியம் சார்ந்த போட்டிகள் கருத்தரங்கங்கள் நடத திட்டமிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்.

தமிழ் திறனறிவுத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்ககுக்கு திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தப்படும். திருக்குறள் உரை அரசு அலுவலகங்களில் எழுதுவதுபோன்று தனியார் அலுவலகங்களிலும் எழுத ஊக்குவிக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். இதோடு சேர்த்து குமரிக்கு வந்துவிட்டு இந்த பகுதிக்கு அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியாது. தமிழ்நாடின் தென்கோடியில் இருக்கிறோம் நாம். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

பேரறிவு சிலையான வள்ளுவர் சிலையை, மறுபடியும் சொல்கிறேன் திருவள்ளுவர் சிலை வெறும் சிலை அல்ல, திருக்குறள் வெறும் நூல் அல்ல. நமது வாழ்க்கைக்கான வாழும் கேடையம். அது நம்மைக்காக்கும், நம்மை அழிக்கவரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டும் அல்ல காவி சாயம் பூச நினைக்கும் தீய எண்ணங்களையும் விரட்டி அடிக்கும். தனிமனிதன் முதல் அரசு வரைக்கும் நாம் செய்ய வேண்டியது பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் அதிகமாக பரவச் செய்ய வேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டும் அல்ல தனியார் நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.