சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன் ஆளும் திமுகவில் பொறுப்பில் இருப்பவர் என்ற பேச்சுகள் அடிபடும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?

ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாள்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு தி.மு.க அரசின் காவல்துறையே முழு பொறுப்பு! ஞானசேகரன் தி.மு.க உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் தி.மு.க-வின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான தி.மு.க நோட்டிஸ், முரசொலி நாளேடு செய்தி உள்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளுங்கட்சியான தி.மு.க-வில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது. FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட @mkstalin மாடல் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?
காமக்கொடூரன் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில்…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 26, 2024
யார் அந்த நபர்? #யார்_அந்த_SIR ? யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த தி.மு.க அரசு? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஸ்டாலின் அரசின் பொறுப்பு! இனி இந்த வழக்கை தி.மு.க அரசின் காவல்துறை விசாரிப்பதற்குத் தார்மீகத் தகுதியில்லை! எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/PorattangalinKathai