“அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்” – தமிழக அரசு அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் எனப் பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும்.

அரசாணை

மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கும் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்

நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MaperumSabaithanil