தஞ்சை: ஆற்றில் உடைப்பு; ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின… கவலையில் விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, நேமம் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து கோனக்கடுங்கால் கிளை ஆறு பிரிந்து செல்கிறது. இந்த ஆறு திருவையாறு அருகே உள்ள வரகூர் உள்ளிட்ட கிராமங்களை கடந்து அம்மன்பேட்டை பகுதியில் வெட்டாற்றில் கலக்கிறது. வடிகாலாகவும், பாசன வாய்க்காலாகவும் இந்த ஆறு திகழ்கிறது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்

இந்த நிலையில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் கோனக்கடுங்கால் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் பல இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்திருந்தன. இதனால் மழை நீர் ஆற்றில் செல்வதில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் ஆற்றில் நீர் வரத்து அதிகமானது.

இந்த நிலையில் வரகூர் அருகே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வயலுக்குள் புகுந்தது. இதனால் வயல்கள் ஏரி போல் மாறியது. நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள், வாழை தோட்டம் உள்ளிட்டவை நீரில் மூழ்கியுள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் வரகூர், கோனோரிராஜபுரம், கருப்பூர், ஐம்பதுமேல் நகரம், செந்தலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நீரில் மூழ்கிய வயல்

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “கோனக்கடுங்கால் ஆற்றில் தூர்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை. ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்போதே கூறினோம். ஆனால் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை. இந்த சூழலில் பெய்த தொடர் மழையில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதிகாரிகள் இனியும் தூங்காமல் துரித கதியில் செயல்பட்டு மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் இன்னும் பல கிராமங்கள் இந்த உடைப்பால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்” என்றனர்.