அதானி விவகாரம்: திமுக Vs அண்ணாமலை’ – அதிரும் அரசியல் களம்!

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் அதானி, ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்காக 250 மில்லியன் டாலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும், அதை மறைக்க பல்வேறு திட்டங்களை தீட்டியதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இதையடுத்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “கடந்த ஜூலை 10-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?. அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அதானி

இதற்கு முதல்வர் ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்; அவருக்கெல்லாம் நான் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது” என்றார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அன்று முதல் அதானி விவகாரத்தில் தொடர்ச்சியாக தி.மு.க-வை சாடி வருகிறார், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

அப்போது அவர் வெளியிட்டிருந்த பதிவில், “தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த தி.மு.க, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், ‘அதானியை முதல்வர் சந்திக்கவேயில்லை. அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை’ என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை, “அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்கள். உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமீன் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா?. தி.மு.க அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, ‘வழக்கு தொடருவோம்’ என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. வழக்கு தொடருவோம் என்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம், எந்தத் தவற்றையோ மறைக்க நடக்கும் முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதையும், இதற்கு எல்லாம் தமிழக பா.ஜ.க பணிந்து செல்லாது என்பதையும் ஜாமீன் அமைச்சருக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

செந்தில்பாலாஜி

இதற்கு செந்தில் பாலாஜி, “அதானி நிறுவனம் குறித்தும், மின்சார கொள்முதல் குறித்தும் தெளிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புரியவில்லை என்றால் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்ளலாம். படித்தும் புரியவில்லை. பக்குவமும் இல்லை. அறிவுத் திறனும் இல்லை. அவர்கள் குறிப்பிடுவது கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். அதுவும், உச்ச நீதிமன்றம் வரை சென்று அங்கு தடையாணை வழங்கவில்லை. அதனால், நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் ஏதோ ஒப்பந்தம் போட்டது போலத் தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். அது ஒருபோதும் எடுபடாது” என்றார்.

இதில் கடுப்பான அண்ணாமலை, “இ.டி கேசில் உள்ள போன நீ எல்லாம் என் மேலே கேஸ் போட்டு, எஃப்.ஐ.ஆர் வாங்கணும்னு என்னுடைய தலைவிதி, ஒரு வருஷம் ஜெயிலில் கம்பி எண்ணுனவன் நீ… நான் ஆக்ஸ்போர்ட்டில் படித்த அதே நேரத்தில் இந்த அமைச்சர் புழல் சிறையில் கம்பி எண்ணி படித்தார். என்னை பொருத்தவரை கேட்ட கேள்விக்கு பதில் வரவேண்டும். அதானிக்கு கொடுத்தியா? இல்லையா?, ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.77 கோடி கொடுத்தாயா இல்லையா? கொடுத்தேன் என்று ஒத்துக்கோ… அதை விட்டுவிட்டு சுத்தி சுத்தி வளைக்கின்ற வேலையெல்லாம் என்னிடம் விட வேண்டும். தைரியம் இருந்தா என் மேலே கேஸ் போடுயா பார்த்துக்கலாம்...” என்று ஒருமையில் கொதித்தார்.

அண்ணாமலை

இதற்கிடையில், “அதானியை சந்திக்கவில்லை” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு அண்ணாமலை, “அதானிக்கும் தி.மு.க அரசுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது என்பதை தொடர்ந்து பேசி வருகிறோம். கடந்த ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது என்று சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அதானியை சந்திக்கவில்லை. என் மீது எதிர்க்கட்சிகள் அபாண்டமாக குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார். பா.ஜ.க எந்த ஒரு இடத்திலும் அப்படி குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அப்படி சந்திப்பது குற்றமும் இல்லை.

நீங்கள் அதானிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளீர்களா என்பது தான் கேள்வி. ஆனால் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அவர்கள் அதானியை சந்தித்தார். சென்னையில் லீலா பேலஸ் ஓட்டலிலோ, அவருடைய வீட்டியோ, வேறு ஏதாவது ஒரு இடத்திலோ சந்திக்கவில்லை என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவிப்பாரா? அப்படி கூறினால் சந்திப்பு நடந்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க நாங்கள் தயார். கடந்த வாரம் கூட சந்திப்பு நடந்திருக்கிறது. உங்கள் மருமகன் சந்தித்தால் நீங்கள் சந்தித்ததாக அர்த்தமாகாதா?. சபரீசன் சந்திக்கிறார். முதலமைச்சரை சுற்றியுள்ள அதிகாரிகள் சந்திக்கிறார்கள்” என்றார்.

மோடி, ஸ்டாலின் | பாஜக – திமுக

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர், “எங்களது தலைவர் ஆதாரம் இல்லாமல் எந்த குற்றச்சாட்டையும் சுமத்த மாட்டார். அப்படித்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசுக்கு அதானியுடன் தொடர்பு இருக்கிறது. எனவேதான் நாடாளுமன்றத்தில் கூட இந்தியா கூட்டணி அதானிக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில், திமுக உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவில்லை. விரைவில் ஆதாரத்தை வெளியிடுவதற்கும் அண்ணாமலை தயாராகி வருகிறார்” என்றனர்.

ஆனால் இதனை தி.மு.க-வினர் முற்றிலும் மறுக்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலய வட்டாரங்கள், “மோடி, அதானி இடையிலான தொடர்பை மறைப்பதற்காக இப்படி பிரச்னையை பா.ஜ.க-வினர் கிளப்பி வருகிறார்கள். இதில் உண்மையில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலேயே முதல்வர் பதிலளித்துவிட்டார். தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் தான் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல. மேலும் இதில் தொடர்ந்து பேசுவதற்கு இதில் ஒன்றுமில்லை” என்கின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram