`இன்னும் கல்யாணம்கூட ஆகல’ கொதிக்கும் ஊழியர்கள்; போராட்டக் களமானதா ராஜரத்தினம் ஸ்டேடியம்?

”நூறு நாள் வேலை கேள்விப் பட்டிருப்பீங்க. ஆறு நாள் வேலை கேள்விப்பட்டிருக்கீங்களா? வாரத்துக்கு ஒன்றரை நாள் வீதம் மாசத்துக்கு ஆறு நாள் தான் வேலை. சம்பளம் 12000 தர்றாங்க.

இந்த ஆறு நாள் போக மிச்ச நாளுக்கு மட்டும் யார் என்ன வேலை தருவாங்க? அதனால எங்களில் நிறைய பேருக்கு கல்யாணமே ஆகல. இந்தக் கொடுமைகளை எல்லாம் எங்க போய் சொல்றது?” என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜவேல் ஒரு பகுதி நேர ஆசிரியர்.

ராஜவேலைப் போன்று தமிழகம் முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று சென்னை வந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற போது கைதாகினர்.

கைதான பகுதிநேர ஆசிரியர்களை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கின்றனர் காவல்துறையினர்.

ராஜரத்தினம் ஸ்டேடியமும் சரி, அதன் முன்புறமும் சரி கடந்த சில ஆண்டுகளாகவே தினமும் யாராவது எதற்காகவாவது போராட ஒன்று கூடும் இடம் என்றாகி விட்டது. அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள் ஆகியோர் கடந்த வாரம் தங்களின் கோரிக்கைகளுக்காக அங்கு கூடினர். ஜனநாயக நாடுகளில் எந்த ஒரு கோரிக்கைகளுக்காக போராட உரிமை உள்ளது தான் என்றாலும் தினமொரு போராட்டம் என்பதை அவ்வளவு உவப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஸ்டாலின்

சென்ற வாரம் திருச்சியில் இருந்து வந்த அங்கன்வாடி ஊழியர் ஒருவரிடம் பேசிய போது, ‘அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கான தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். பொதுவாக எந்த ஒரு கோரிக்கையையும் உடனே நிறைவேற்றித் தரணும்னு கேட்க முடியாது. கால அவகாசம் தந்த பிறகும் அது நிறைவேறாத பிறகுதான் போராடத் தள்ளப்படுறாங்க. அதேபோல தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவை விட திமுக ஆட்சி அரசு ஊழியர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிச்சி வந்ததுதான் கடந்த கால வரலாறு. ஆனா சமீபமா இதுலயும் மாற்றம் தெரியத் தொடங்கியிருக்கு.” என்றார்.

”தினமும் கூட்டம் கூடினா எனக்கு வியாபாரம் நல்லாருக்கும்தான். ஆனா வர்ற ஒவ்வொருத்தர் கதையையும் கேட்டா சமயத்துல எனக்கே ரொம்பக் கஷ்டமா போயிடும்” என்கிறார் ஸ்டேடியம் அருகே இளநீர் வியாபாரம் செய்து வரும் முருகேசன்.

“எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, ஆட்சிக்காலம் முடிவடையப் போகிற நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வரிசை கட்டுவது வழக்கம்தான். கடைசி நேரம் என்பதால் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படலாமென நினைப்பார்கள். போராட்டக்காரர்கள். தேர்தலை மனதில் வைத்து ஆளுங்கட்சியுமே சில விஷயங்களைப்  பண்ண நினைப்பார்கள். 

ராஜரத்தினம் ஸ்டேடியம்

ஆனால் இப்போதைய திமுக ஆட்சியில் நடக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் திமுகவின் முந்தைய ஆட்சிக் காலங்களில் இல்லாதவை என்கிற அரசியல் விமர்சகர்கள், முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற திமுகவின் பதவி காலம் முடிய இன்னும் முழுதாக ஒரே வருடம்தான் உள்ளது. இப்போதே இந்தப் பக்கம் கேட்கும் கூக்குரல்கள் குறித்து விசாரித்தால் நல்லது’ என்கின்றனர் போராட்டக் களத்துக்கு வந்திருந்தவர்கள். காது கொடுப்பார்களா ஆட்சியாளர்கள்?