மும்பையில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வான தமிழர்; தமிழ்செல்வத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?!

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளனர். ஆனால் இன்னும் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. வரும் 15-ம் தேதிக்குள் அமைச்சரவை பதவியேற்கும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இன்னும் இலாகாக்கள் தொடர்பாக பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. உள்துறை தனக்கு வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து வருகிறார். அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் இருக்கிறது.

தமிழ் செல்வம்

ஏக்நாத் ஷிண்டே தனது கட்சிக்கு உள்துறை மட்டுமல்லாது வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை என முக்கிய துறைகளை கேட்டுக்கொண்டிருக்கிறார். தங்களது கட்சிக்கு 11 முதல் 13 அமைச்சர் பதவி கேட்பதாகவும், ஏக்நாத் ஷிண்டேயின் முயற்சியாலும், அவரது நலத்திட்டங்களாலும்தான் மஹாயுதி கூட்டணி இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருப்பதாக சிவசேனா தலைவர் ஒருவர் தெரிவித்தார். அஜித் பவாருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தால், ஏக்நாத் ஷிண்டேயிக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் அது தொண்டர்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த தலைவர் தெரிவித்தார்.

அஜித் பவாரும் தனக்கு நிதியமைச்சகம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் தனது கட்சிக்கு 10 அமைச்சர் பதவி வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பா.ஜ.க 8 அமைச்சர் பதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. பா.ஜ.க முதலில் இலாகா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை அமைச்சர் பதவி என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். தற்போது துணை முதல்வர்கள் கூட இலாகா இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

புதிய அமைச்சரவையில் இடம் பிடிக்க எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு திரட்ட ஆரம்பித்துள்ளனர். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க மூத்த தலைவர்களை சந்தித்து தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க உதவும்படி கேட்டு வருகின்றனர். பா.ஜ.கவில் இருந்து மும்பை கட்சி தலைவர் ஆசிஷ் ஷெலார் முக்கிய அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9வது முறையாக எம்.எல்.ஏ.வாகி இருக்கும் காளிதாஸ் கோலம்பருக்கு இம்முறை பா.ஜ.க அமைச்சர் பதவி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பா.ஜ.கவின் மங்கள் பிரபாத் லோதாவும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தவிர முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகன் நிலேஷ் ரானேயிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தெரிகிறது. நிலேஷ் ரானே தீவிர இந்துத்துவ ஆதரவாளராக இருக்கிறது.

மும்பையில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாகி இருக்கும் தமிழ் செல்வம் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். தென்னிந்தியாவில் இருந்து மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தமிழ் செல்வம் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே தமிழ் செல்வத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க இருக்கிறது. சிவசேனாவை சேர்ந்த தானாஜி சாவந்த் பெயரும் அமைச்சர் பதவிக்கு அடிபடுகிறது.

ஏற்கனவே முந்தைய அரசில் தானாஜி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். எனவே எப்படியும் அமைச்சராகிவிடவேண்டும் என்பதற்காக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரைக்காக பா.ஜ.கவை நாடி இருக்கின்றனர். இப்போது அமைச்சர் பதவி கிடைக்கவில்லையெனில் அடுத்து கிடைக்க வாய்ப்பு இல்லை என்று எம்.எல்.ஏ.க்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனர்.