நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்’ என அவர் சொன்ன பதில் பெரும் சர்ச்சையானது. `ஆர்.எஸ்.எஸ் வலையில் சீமான் விழுந்துவிட்டார்’ என தி.மு.க தரப்பு கடுமையாகச் சாடியது. இது தொடர்பான நா.த.க-வின் அதிகாரப்பூர்வ மாத இதழான `புதியதொரு தேசம் செய்வோம்’ வாயிலாக கேள்வி பதில் வடிவில் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அதில், “ஐயா ரஜினிகாந்தை நான் சந்தித்ததை வைத்து, என்னை ‘சங்கி’ என முத்திரைக் குத்தினார்கள் திராவிடக் கருத்தாக்கிகள். இதே ஐயா ரஜினிகாந்தை வைத்து, ‘கலைஞர் எனும் தாய்’ எனும் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். நாணய வெளியீட்டு விழாவுக்கும், இன்னப் பிற நிகழ்வுகளுக்கும்கூட அவரை அழைத்தார். அப்போதெல்லாம் ஐயா ஸ்டாலின் சங்கியாகவில்லையா? வெங்கையா நாயுடு ஐயா கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்; ராஜ்நாத் சிங் ஐயா கருணாநிதியின் நாணயத்தை வெளியிடுகிறார். கூடவே நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வுக்கெல்லாம் அரசியல் சாயம் பூசாது, அதனை அரசியல் நாகரிகமெனக் கதையளந்தவர்கள் எனக்கும், ஐயா ரஜினிகாந்துக்கும் இடையேயான தனிப்பட்ட சந்திப்புக்கு உள்நோக்கம் கற்பித்து காவிச்சாயம் பூசுவதேன்?” என வினவியிருப்பதோடு சங்கி என்றால் நண்பன் எனச் சொன்னதற்கும் பதில் சொல்லியிருக்கிறார்.

“ ‘சங்கி’ என்பதற்கு உண்மையிலேயே நண்பன் எனும் பொருளிருக்கிறது. இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்த துளசிதாசர், ராமனுடைய நண்பன் அனுமன் எனக் குறிப்பிடுவதற்கு, ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். ‘சங்கி’ என்றால், ‘பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்’ எனும் பொருளும் பாலி மொழியில் இருக்கிறது. தற்காலச்சூழலில், ‘சங்கி’ என்பதை சங் பரிவார் அமைப்புகளையும், அவர்களோடு உறவு வைத்திருப்பவர்களையும் குறிக்கிற அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து, “ஐயா ரஜினிகாந்த் உடனான சந்திப்பை வைத்து என்னை, ‘சங்கி’ என்றதற்கு, ‘நண்பன்’ எனும் பொருள் இருப்பதைக் குறிப்பிட்டேன். உள்நோக்கம் கொண்ட அந்த அரசியல் அவதூறைக்கூட ‘நண்பன்’ எனும் வேறு பொருள்பட நான் எடுத்துக் கொள்வதாய் கூறினேன். அதேசமயம், சங் பரிவார் அமைப்புகளைக் குறிக்கிற வகையில், ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்தும்போது அது திமுக-வுக்குத்தான் பொருத்தமானதாக இருக்குமென்பதைக் கூற, “உண்மையான் சங்கி திமுகதான்” என அச்செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் குறிப்பிட்டேன். ஆனால், என் பேச்சை வழக்கம்போல வெட்டி ஒட்டி, திரித்துவிட்டார்கள். இப்போதும் சொல்கிறேன் உண்மையான் சங்கிகள் திமுக-வினர்தான்.
“90 விழுக்காடு இந்துக்களின் கட்சி திமுக” எனச் சொல்கிற ஐயா ஸ்டாலின் சனாதன எதிர்ப்பாளர்; “தமிழர்கள் இந்துக்களே இல்லை” எனச் சொல்கிற நான் சங்கியா? திராவிட மாடலின் முன்னோடி ராமர்தான் எனச் சொன்ன அமைச்சர் ரகுபதி சமூக நீதிக்காவலர்; இராவணப் பாட்டனைப் போற்றிக் கொண்டாடும் நான் சங்கியா? பசு மடம் கட்டும் சேகர்பாபு சமத்துவவாதி; மாட்டிறைச்சி உணவுக்காகக் குரலெழுப்பும் நான் சங்கியா? என்ன தர்க்க நியாயமிது?”
“இந்த 14 ஆண்டுக்கால நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணத்தில் பாஜக-வின் கொள்கைகளையோ, திட்டங்களையோ, சட்டங்களையோ நான் ஆதரித்த ஒரே ஒரு இடத்தைக் காட்ட முடியுமா? இந்துத்துவாவுக்கு எதிர்திசையில் இருக்கும் என் மீது ‘சங்கி’ என முத்திரைக் குத்தும் இவர்கள், “இந்துத்துவா என் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது” என முழங்கிய உத்தவ் தாக்கரேவை எப்படிப் பார்க்கிறார்கள்? அவரை எதற்காக, ‘இந்தியா’ கூட்டணிக்குள் இணைத்து வைத்திருக்கிறார்கள்?
கேரளா முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் குறிவைத்து அமலாக்கத்துறையாலும், வருமான வரித்துறையாலும் பழிவாங்கப்படுகிறபோது, ஐயா ஸ்டாலினையோ, அவரது குடும்பத்தினரையோ பாஜக விட்டு வைத்திருப்பதேன்? திமுக மீது என்ன பரிவு பாஜக-வுக்கு?
என்னை, ‘சங்கி’ என அவதூறுப் பரப்பிய கருத்தாக்கிகளே! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரை வந்தபோது அவர் செல்லும் சாலையைப் பராமரிக்கச் சொன்னது தி.மு.க ஆட்சிதானே? நான் பா.ஜ.க-வின் ஆளென்றால், என் பிள்ளைகளின் வீட்டுக்கு தேசியப் புலனாய்வு முகமை எதற்கு வந்து சோதனை செய்தது? நான் அவர்களுக்கு அனுசரணையாக இருந்தால், எதற்கு எங்களது சின்னத்தைப் பறிக்கிறார்கள்? இதற்கு என்ன சொல்லப் போகிறது திராவிடக்கூட்டம்?

நேர்மையாக என்னையும், எனது அரசியலையும் எதிர்கொள்ள வக்கற்ற கோழைகள் அவதூறுகளின் மூலம் வீழ்த்தத் துடிக்கிறார்கள். அதனால்தான், ஒற்றைச் சந்திப்புக்கே அலறித் துடித்து, இத்தகைய அவதூறைப் பரப்புகிறார்கள். சத்தியமே உருவாய் நின்ற சத்தியத்தலைவன் பிரபாகரனின் மகன் நான். இந்த அவதூறுகளை எல்லாம் நாங்கள் கொண்டிருக்கிற அரசியல் அறமே அறுத்தெரியும்” எனக் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.