திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒரு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. முக்கியமாக கோவிலூர் மற்றும் நந்தவனம் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த பாதையை மற்ற கிராம மக்களும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். சுமார் 250 மீட்டர் தூரம் கொண்ட இந்த சுரங்கப் பாதை இன்னும் கட்டிமுடிக்கப்படாத நிலையில் உள்ளது. இது கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள போதும் கடந்த வருடம் ஜூலை 25 (2023) அன்று இந்தச் சுரங்கப் பாதை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு முறையாக மின் விளக்குகளும் அமைத்துத் தரப்படவில்லை. ஊற்று நீர் வழிந்து கொண்டே இருப்பதால் தண்ணீரும் தேங்கிக் கொள்ளும் நிலையில் இந்த பாதையை மக்கள் பகலில் கடப்பதே கடினமான நிலையில் உள்ளது. அதனால் பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதை மிகவும் அச்சுறுதலாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலூரில் சுமார் 75 குடும்பங்களும் நந்தவனத்தில் சுமார் 35 குடும்பங்களும் வசித்து வருவது குருப்பிடத்தக்கது.







இது குறித்து அப்பகுதி மக்கள், “நாங்க இந்த சுரங்கப் பாதையைக் கடந்துதான் எங்க கிராமத்துக்குப் போயிட்டு இருக்கோம். இங்க போதுமான மின் விளக்கு போடலை. இங்க காவேரி ஆறு பக்கம், அதுனால இந்த சுவர்ல இருந்து ஊத்து தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கும். அதுனால தண்ணியும் நிறையத் தேங்கி நிக்கும். யாருமே நடக்க முடியாது, வண்டிலாம் போகவே முடியாத அளவுக்கு இருக்கும்ங்க. வெளிச்சமும் சுத்தமா இல்லாம ரொம்பவே இருட்டா இருக்கும் இந்தப் பாதை. பெரிய வண்டிகள் எல்லாம் இதுல போய்ட்டு வர ரொம்ப சிரமமா இருக்கும். இதுக்கு நாங்க லைட் போட்டு தரச் சொல்லி கோரிக்கையிலாம் கொடுத்தோம். மத்திய குறைத்தீர்ப்பாயத்துல புகார் கொடுத்திருந்தோம். அவங்க வந்து பார்த்துட்டு பாதையோட கடைசில ரெண்டு லைட் மட்டும் போட்டு கொடுத்துட்டு போனாங்க. இந்த பெரிய சுரங்கப் பாதைக்கு எப்படி ரெண்டு லைட் பத்தும். இதுல கடைசில மட்டும் ரெண்டு லைட் இருந்தா நாங்க எப்படி பாதையோட ஆரம்பத்துல நடந்து போக முடியும்.
அதுமட்டுமல்லாம இங்க வெளிச்சம் இல்ல, அப்புறோம் தண்ணியும் தேங்கி நிக்கிறதுனால பொதுமக்கள் எல்லாரும் ரயில்வே தண்டவாளத்தைத்தான் தாண்டி வர்றாங்க. அது ரொம்பவே ஆபத்தான விஷயம். தினமும் வேலைக்கு போற பெண்கள் நிறைய பேர் இந்த ரயில்வே பாதைய தாண்டித்தான் போறாங்க” என்று கூறினார்கள்.
இந்த பகுதியில் உள்ள பெண்களிடம் இதைப் பற்றிக் கேட்கையில், “எங்களுக்கு இந்த பாதையில பகல்ல போகவே ரொம்ப பயமா இருக்கும். இருட்டினதுக்கு அப்புறோம் இங்க சாராயம் குடிக்கிறாங்க. இதெல்லாம் யாரு பன்றாங்கன்னு தெரில. எப்போ என்ன வேணா ஆகலாம்ன்னு பயமா இருக்கு” என்கிறார்கள்.





மேலும் “இங்க ஊர்த் தலைவர் கிட்ட கோரிக்கை வெச்சோம். அதுக்கு அவரு, `நாங்க இதைப் பண்ணி தர மாட்டோம். இது மத்திய அரசோட வேலை. பணி இன்னும் நிறைவு பெறாம இருக்கு. மத்திய அரசு எங்க கிட்ட ஒப்படைச்சா மட்டும் தான் நாங்க பண்ணுவோம்’ அப்டின்னு சொல்றாங்க. இப்போ இந்த சுரங்கப் பாதையில மத்திய அரசாங்கம் எங்களுக்கு லைட் போட்டு தருமா இல்ல மாநில அரசாங்கம் போட்டு தருமான்னு தெரியல. எங்களோட கோரிக்கை என்னென்னா மாநில அரசாங்கம் எங்களோட இந்த நிலைமைய கருத்தில் கொண்டு தற்காலிக தீர்வா எங்களுக்கு லைட் போட்டு தந்தா நல்லா இருக்கும்” என்று கூறுகிறார்கள்.