கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை தொழில்நுட்ப நகரமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மே 1, 1932-ல் மண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்த இவர், காங்கிரஸில் நீண்ட காலம் பயணித்தார். 1999 முதல் கர்நாடக முதல்வராக பதவி வகித்தவர், 2004-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் ஆளுநராகவும், 2009 -2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்த இவருக்கு, கடந்த ஆண்டு (2023) பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

இந்த நிலையில், 92 வயதான எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 2:45 மணியளவில் காலமானார். சில காலமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ஐடி-பிடி துறையின் வளர்ச்சிக்கு, குறிப்பாக முதலமைச்சராக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கர்நாடகம் எப்போதும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கும். கிருஷ்ணா காங்கிரஸில் சேர்ந்த ஆரம்ப நாள்களில் என்னை வழிநடத்தியவர்.” என்றார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, “தனது மக்களின் நலனுக்காக எப்போதும் முதன்மையாக, உண்மையாக உழைத்தத் தலைவர். அந்தந்த மாநிலங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில், நாங்கள் பகிர்ந்து கொண்ட போட்டி மனப்பான்மை எங்கள் நட்பு தாண்டியது. அவர் எப்போதும் தனது மக்களின் நலனுக்காக முன்னுரிமை அளித்த ஒரு உண்மையான தலைவர். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.