‘அதானி மீது அமெரிக்க தொடுத்திருக்கும் வழக்கில் தனக்கும் சம்பந்தம் உள்ளது’ என செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் மீது ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சோலார் ஒப்பந்தம் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாகவும், ஒப்பந்தம் குறித்து பொய் வாக்குறுதிகள் கொடுத்து அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி பணம் பெற்றதாகவும் அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தது.
இந்த சோலார் ஒப்பந்தத்தில் பெறப்பட்ட லஞ்சத்தொகை பெருமளவு ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு சென்றுள்ளது எனவும், அதில் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் சம்பந்தம் உள்ளது எனவும் செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது. இந்த நிறுவனங்களை எதிர்த்தும், இந்த செய்திகள் பரவ உதவியாக இருந்த கூகுள் நிறுவனத்தின் மீதும் ஜெகன் மோகன் ரெட்டி அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெகன் மோகன் ரெட்டி சார்ப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், “கௌதம் அதானியிடம் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி லஞ்சம் வாங்கியதாக பல செய்தி நிறுவனங்கள் தவறான தகவலை பரப்பி உள்ளது. கௌதம் அதானியின் வழக்கை விசாரிக்கும் எஃப்.பி.ஐ ஜெகன் மோகன் ரெட்டிக்கு இதுவரை எந்த சம்மனும் அனுப்பவில்லை.
இந்த விஷயத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஊழல் செய்தார், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்துள்ளார் போன்ற விஷயங்களை கூறுவது முழுக்க முழுக்க பொய் மற்றும் அவரின் புகழை கெடுப்பதாகும்.

இப்படி ஜெகன் மோகன் ரெட்டி குறித்த தவறான தகவல்களை செய்தி நிறுவனங்கள் பரப்பியதற்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடும், மேலும், இது மாதிரியான செய்திகளை வெளியிட தடை உத்தரவும் போட வேண்டும்” என்று வாதிட்டார்.
ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த மனுவின் படி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஜெகன் மோகன் ரெட்டி குறித்த அவதூறு செய்திக் கட்டுரைகளை நீக்குமாறு செய்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. நோட்டீஸ் வழங்கியப்பின், மேலும் இதுமாதிரியான செய்திகள் வெளியிடப்பட்டால் அந்த செய்தி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 16-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.