அடையாறு வெள்ளம்… வரதராஜபுரத்துக்கு வருவதை தடுப்படி எப்படி? கோரிக்கை வைக்கும் மக்கள்!

சென்னை, தாம்பரம் அருகே வரதராஜபுரம் மற்றும் எருமையூர் உள்ளன. அப்பகுதியில் கனமழை பொழியும்போது முறையான மழைநீர் வடிகால்கள் இல்லாததால், அடையாறு ஆற்றில் செல்ல வேண்டிய உபரி நீர் வெளியேற முடியாததால் வெள்ளம் ஏற்பட்டு அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நகரமயமாதலின் காரணமாக இப்பகுதியில் புதிய வீடுகளும், தனியார் கட்டிடங்களும் அதிகரித்து வருவது வரதராஜபுரம் வாசிகளிடையே மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதிக்கு நேரில் சென்று பார்த்தோம்.

தடுக்கப்பட்ட கால்வாய் நீர்…

இதுகுறித்து வரதராஜபுரத்தில் நீண்டகாலமாக வசித்துவரும் ஜோஸ் புன்னூஸ் பேசும்போது, “வெளிவட்டச் சாலை (ஓஆர்ஆர்) அமைக்கப்பட்டதாலும், அடையாறு ஆற்றில் கான்கிரீட் பேன்ட்கள் இல்லாததாலும், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வரதராஜபுரம் மற்றும் எறுமையூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஏற்கெனவே நகரமயமாதலின் காரணமாக அடையாற்றின் நீளமும் அகலமும் சுருங்கியுள்ளது.

புதிய லே அவுட்

வெளிவட்ட சாலை வந்தபிறகு, உபரி நீர் ஊருக்குள் வராமலிருக்க அரசாங்கத்தால் அடையாறு ஆற்றின் இருபுறமும் மண் கரைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கனமழைக் காலங்களில் வெள்ளநீர் வரும் வேகத்தில் மண்கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் ஊருக்குள் வந்து விடுகிறது. மழைநீர் செல்லும் அடையாறு ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடுவதால் இராயப்ப நகரின் பெரும்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. வெள்ள நீர் வெளியே செல்ல எந்த வழியும் இல்லாததால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அப்படியே ஊருக்குள் தங்கிவிடுகின்றது. இதனால், அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களுக்குச் சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது.

மேலும் தாம்பரம் – கிஷ்கிந்தா மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் இல்லாததால் பல நாள்களாக மழைநீர் தேங்கி வருகின்றது. இந்த பகுதியில் புதிய லேஅவுட் உருவாகியுள்ளது. கட்டடங்களைக் கட்டுவதற்கு 7 அடிவரை மண்ணைக் கொட்டி உயர்த்தி உள்ளார்கள். இயற்கையாகவே இப்பகுதியில் அமைந்திருந்த 11 கால்வாய்களை மூடியுள்ளார்கள். மேலும் 12 அடிவரை சுற்றுச்சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றின் சிறு, சிறு பிரிவுகளான இந்தக் கால்வாய்கள் மூடப்பட்டதன் விளைவாக, ஊர் மக்கள் வசித்துவரும் மேடான பகுதிகள் இப்போது தாழ்வாக மாறியுள்ளது. இதன் விளைவாக மழைநீர் ஆற்றிற்குச் செல்வதற்கு வழி இல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது” என்று அவர் கூறினார்.

சாலையில் ஓடும் வெள்ள நீர்

‘‘புதிய லேஅவுட்டில் கால்வாய்ப் புதைக்கப்பட்டுள்ளதாக, பகுதிவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அந்த லே அவுட் முழுவதும் பட்டா நிலத்தில் இருப்பது தெரிய வந்தது. ஆனாலும், வெள்ள அபாயத்தைத் தடுக்க கால்வாய்களில் மழை நீர் செல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டுமென்று நிலத்தின் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், உத்தரவிட்டுப் பல நாள்கள் ஆகியும் வெள்ள நீர் செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அடுத்த மழைக்கு எங்கள் பகுதி வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க வேண்டும் என்றால், மழை நீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும். அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர் வரதராஜபுரம் பகுதி மக்கள்.