கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் மகன் கே.எஸ்.வைஸ்னவ்ராஜ், சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தைவான் நாட்டில் எம்.எஸ் படித்து சிறிது காலம் அங்கு பணியாற்றி வந்தார். அப்போது அந்த நாட்டைச் சேர்ந்த ஜிம்மி சாங் – மிக்கி வாங் தம்பதியரின் மகள் கிளாடியா சாங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கிளாடியா சாங் தற்போது ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சமூக சேவையில் நாட்டம் அதிகம். அதில் இணைந்து பயணித்தபோது காதல் மலர்ந்தது. இது தொடர்பாக இரண்டு பேரும் தங்கள் பெற்றோரிடம் காதலைச் சொல்லி திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

அவர்களின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இவர்களின் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
மங்கள வாத்தியம் முழங்க மணமக்கள் வேட்டி சேலை, மாலை அணிந்து தமிழ் முறைப்படி தாலி கட்டி திருமணம் நடந்தது. மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தைவான் நாட்டில் இருந்து பெண்ணின் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இரவு விருந்து தமிழர் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
