மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்ப புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஜமுனா என்ற பெண் சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் கே.ஆர்.ஸ்ரீராம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு துவக்கப்பட்ட மகளிர் ஆணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இதன்மூலம் புதுச்சேரி பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியாகியிருக்கிறது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து பேசிய நீதிபதிகள், “இந்த வழக்கில் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை நீதிமன்றம் ஆய்வு செய்தது.

அந்த மனு, காலியாக இருக்கும் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறையை இழுத்தடிப்பதற்கான முயற்சியாக மட்டுமே தெரிகிறது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் முடிவில், `தேர்வுக்குழு அமைக்கும் நடவடிக்கை செயல்பாட்டில்தான் இருக்கிறது. மாநில அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தேர்வுக் குழுவின் பதவிக்காலம் ஒரு ஆண்டு. எனவே தேர்வுக் குழுவை நிரந்தரமாக அமைக்க மாநில அரசின் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பரிந்துரைத்திருக்கிறது. அதற்காக ஆணைய விதிகளில் திருத்தம் செய்து சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்வுக் குழு அமைக்கும் செயல்முறை எப்போது தொடங்கியது என்பதற்கும், அரசின் ஒப்புதலுக்கு எப்போது அனுப்பப்பட்டது என்பதற்கும் போதுமான விபரங்கள் இல்லை.
கடந்த 2022 பிப்ரவரி 6-ம் தேதி ஆணையத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால் ஜூன் மாதம்தான் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான். தேர்வுக்குழு திருத்த வரைவு எப்போது சட்டத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது ? அதன் நிலை என்ன ? என்பது குறித்த விபரங்கள் பதில் மனுவில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே தேர்வுக் குழுவை அமைக்காதது ஏன்? இது புதுச்சேரி அரசு மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திறமையின்மையையே காட்டுகிறது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது புதுச்சேரி அரசு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான், சம்மந்தப்பட்ட துறை விழித்துக் கொண்டிருக்கிறது.

விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதி, அதற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதுவரை 77 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. விண்ணப்பங்கள் வந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வுக் குழு அமைக்கப்படவில்லை. இது பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மாநில அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வுக்குழுவை ஏன் அமைக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அது தொடர்பான விபரங்களுடன் விரிவான பதில் மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் புதுச்சேரி அரசுக்கு ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை புதுச்சேரி அரசு மாநில சட்டப் பணிகள் ஆணை குழுவிடம் செலுத்த வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
