`நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை அதிமுக ஆதரித்ததா?’ – ஸ்டாலினுக்கு தம்பிதுரை விளக்கம்!

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம், அதானி ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் போன்ற பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று காலையில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. அப்போது, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், `ஹிந்துஸ்தான் ஸின்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியும் வழங்கக் கூடாது.’ என்று மத்திய அரசை வலியுறுத்தி அரசு தரப்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023-ஐ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போதே தி.மு.க எம்.பி-க்கள் தடுத்திருக்கலாம். அதைச் செய்ய இந்த அரசு தவறிவிட்டது. சட்டம் நிறைவேறிய பிறகு, இப்போது தீர்மானம் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறீர்கள்.” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், “சட்டம் நிறைவேறியதென்றால் எங்களுடைய ஆதரவினாலா நிறைவேறியது? மெஜாரிட்டியாக அவர்கள் (பாஜக) இருக்கும்போது, எங்களால் தடுத்துவிட முடியுமா?” என்றார்.

இவ்வாறு, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற, மறுபக்கம் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023-ஐ ஆதரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

அதோடு, எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க-வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.” என்று பதிவிட்டார்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் இதற்கு விளக்கமளித்திருக்கும் தம்பிதுரை, “முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த சட்டம் கொண்டுவரும்போது இருந்த நிலவரம் வேறு. தி.மு.க அங்கம் வகித்த யு.பி.ஏ அரசு, ஏலம் என்ற நடைமுறை இல்லாமல் கனிமங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தார்கள். இதனால், அரசுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதைத் தீர்க்க மோடி அரசு, 2023-ல் ஏல முறையில் கனிம வளங்களைத் தரவேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டுவந்தது.

தம்பிதுரை

அப்போது, `முன்பு யு.பி.ஏ அரசில் இருந்த ஊழலைத் தடுக்க வேண்டுமென்றால் தனியாருக்கு உரிமங்கள் மற்றும் கனிம வளங்களைத் தரக்கூடாது. ஏல முறை வரவேண்டும் என்பதை வரவேற்கிறேன்.’ என்று பொதுவாகச் சொன்னேன். மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு உரிமை தர வேண்டும் என்று எந்த நேரத்திலும் பேசியதில்லை. ஸ்டாலின் பேசியது தவறு. திமுக ஐ.டி விங், டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு அ.தி.மு.க உதவியாக இருந்தது என்று தவறான செய்தி பரப்புவதை சட்டப்படி எதிர்கொள்வோம்.” என்று கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai