“விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை; அம்பேத்கர் நூல் விழாவில் அவர் பங்கேற்றது மகிழ்ச்சி” -திருமாவளவன்

“ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அது தொடர்பான முடிவுகள் விரைவில் வரும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செய்தியாளர்களிடம் பேசியபோது

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சதி திட்டமாக இருக்கிறது. தொடர் வெற்றி பெற்றுள்ளதால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடாமல் அதன் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜகவின் நோக்கம். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள்.

கூட்டணிக் கட்சியில் எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை, அதற்கான சூழ்நிலையும் இல்லை. திமுக அழுத்தம் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் ஆரம்பத்திலேயே நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன்.

தொல் திருமாவளவன்

விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு திமுக அரசை முதன்மையான எதிரி என்று வெளிப்படையாக விஜய் அறிவித்துள்ள நிலையில், நானும், விஜயும் அரசியல் பேசாமல் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தாலும்கூட அதை அரசியலாக்க பலர் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு தீனி போட எனக்கு விரும்பமில்லை. விஜய்யுடன் நிற்பதில் எந்த ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதும் மகிழ்ச்சி.

கட்சியிலுள்ள பத்து துணை பொதுச்செயலாளர்களில் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர். ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படும்போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது நடைமுறை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது உயர்நிலைக் குழு கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கடை பிடிக்கிறோம். கட்சியில் பொறுப்பில் உள்ள தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தலைவரின் கடமை.

ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து அதை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். முன்னணி தோழர்களுடன் கலந்து பேசியுள்ளோம். அது தொடர்பான முடிவு விரைவில் வரும். என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை, அதற்கான சூழல் இல்லை.” என்றார்.