சென்னை அசோக் நகரிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமைச் செயலகமான அம்பேத்கர் திடலில் இன்று (டிசம்பர் 7) காலை முனைவர் ஆனந்த் டெல்டும்டே எழுதிய டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான Iconoclast (பிம்பங்களை உடைப்பவர்) புத்தக வெளியீடு மற்றும் உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தகத்தின் ஆசிரியர், சமூக செயற்பாட்டாளரும், அம்பேத்கரின் பேத்தியின் கணவருமான ஆனந்த் டெல்டும்டே, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சமூக செயற்பாட்டாளர் மருதையன், தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், பத்திரிகையாளர்கள் ஆர். விஜய்சங்கர், ஏ.எஸ். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
8 அத்தியாயங்களைக் கொண்ட Iconoclast புத்தகம், டாக்டர் அம்பேத்கர் பற்றி இது வரை வெளிவராத தகவல்களோடும் அம்பேத்கர் குடும்பத்தினரின் கருத்துக்களோடும் வெளிவந்துள்ளது. பீமா கோரேகான் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த போது ஆனந்த் டெல்டும்டே இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

வாழ்க்கை வரலாற்றோடு அம்பேத்கரை விமர்சன ரீதியில் ஆனந்த் டெல்டும்டே அணுகியிருக்கிறார் என்று பத்திரிகையாளர் ஆர். விஜய்சங்கர் தெரிவித்தார்.
“அம்பேத்கரை வழிபாட்டுக்காகச் சுருக்கும் நிகழ்வு இங்கு நடக்கிறது. காட்சி எது கருத்து எது என்ற வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார் பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம்.
இந்தக் கூட்டத்தில் பேசிய புத்தகத்தின் ஆசிரியர் ஆனந்த் டெல்டும்டே, “இந்த புத்தகம் அம்பேத்கர் வரலாற்றைத் தாண்டி அவரைப் பற்றிய விமர்சன கருத்துக்களையும் உள்ளடக்கியது. இதனால் என்னை அம்பேத்கருக்கு எதிரான கருத்துடையவராகக் கருத வேண்டாம். என்னை ஊக்குவித்து வழிகாட்டிய தலைவர் அம்பேத்கர்தான். காலத்துக்கு ஏற்ற சில மாற்றுக்கருத்துக்களை இதில் வழங்கியிருக்கிறேன். அம்பேத்கருக்குப் பிந்தைய தலித்திய இயக்கங்கள் பற்றியும் எழுதியுள்ளேன். உலகில் தோன்றிய மாமனிதர்கள் யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்பேத்கருக்கு உண்டு. ஏறத்தாழ லட்சக்கணக்கான மக்கள் அம்பேத்கரோடு இன்றும் உணர்வுப்பூர்வமான இணைந்து உள்ளனர். இதை நேற்று அம்பேத்கரின் நினைவு நாளில் என்னால் காண முடிந்தது. இந்த புத்தகம் அம்பேத்கரின் வாழ்க்கை பிரதிபலிப்பவையாக இருக்கும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சகோதரர் மற்றும் தலைவர் திருமாவளவனுக்கு எனது நன்றிகள்” இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வின் இறுதியில் முடிவுரையாற்றிய வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், “Iconoclast என்றால் அடையாளம் அல்லது பிம்ப சிதைப்பாளர், உடைப்பாளர் என்று பொருள். புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்கெனவே இந்தச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தவர். அப்படி உடைத்ததால்தான் புதிய கட்டுமானத்தை உருவாக்க முடியும் என்றவர் அம்பேத்கர். அதனால்தான் ஆனந்த் டெல்டும்டே சொல்வதைப் போல இலட்சக்கணக்கான மக்கள் இன்று அம்பேத்கரோடு உணர்ச்சி பிழம்பாக இணைந்துள்ளனர். ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கருக்கு எதிராகப் பேசவில்லை, அம்பேத்கரை ஒரு வணிகப்பொருளாக, வழிபாட்டுப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது என்று தான் பேசினார்.

அதே போல அம்பேத்கரை எங்கள் சமூகத்தவர், எங்கள் மீட்பர் என்று கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் அவருடைய பங்களிப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆனந்த் டெல்டும்டேவின் கருத்து. இதற்காகத்தான் இவர் அம்பேத்கருக்கு எதிரானவர் என்ற விமர்சனத்தை வைக்கிறார்கள். ஆனால் அவர் அம்பேத்கரியத்தால் நிறைந்தவர். அம்பேத்கரின் பேத்தியின் கணவரான ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கரின் குடும்பத்தவராக இருந்து அதனைப் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். அம்பேத்கர் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அவரைப் பற்றிய வரலாற்றை இரண்டு பேர் எழுதியிருக்கின்றனர். ஒருவர் தனஞ்செய் கீர் இன்னொருவர் கயர் மோலே. ஆனாலும் கூட தனஞ்செய் கீர் ஒரு சாவர்க்கர் சிந்தனையாளர். அவர் எந்த கோணத்தில் அம்பேத்கரைப் பார்த்தார் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். இன்னொருவரும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த ஆதாரப்பூர்வமான புத்தகம் காலத்தின் தேவையாக இருக்கிறது. இதைத் தமிழ்ப்படுத்தும் உரிமையை எங்களுக்குத் தாருங்கள் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர் இசைவளித்துள்ளார். அம்பேத்கர் முன்வைத்த கருத்து, அரசியல், அணுகுமுறை எத்தகையது என்பதை அறிந்து கொண்டு கொண்டாடுவது தான் அவருக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும். எல்லோரும் அம்பேத்கரைக் கொண்டாடுகிறார்கள்.

சங் பரிவார்கள் அம்பேத்கரை இந்துத்துவ தலைவர் என்று அடையாளப்படுத்துகிறார்கள். ஆனந்த் டெல்டும்டே வருத்தத்துடன் கூறினார் தமிழகத்தைத் தவிர்த்துப் பிற தலித் அமைப்புகள் எல்லாம் திசைமாறிவிட்டன என்று. நமக்கு யார் அம்பேத்கர் என்ற தெளிவு இருக்கிறது. தற்காலிகமான வளர்ச்சி, புகழ், அதிகாரம், வெற்றிக்காக நாம் அம்பேத்கரின் பாதையை விட்டு நழுவிவிட முடியாது. 4 எம்.எல்.ஏ போதாது, 10 சீட் வேண்டும் என்கின்றார்கள். நான்கு பத்தானால் மாற்றம் நிகழ்ந்துவிடுமா? எத்தனை சீட்டுக்களாக இருந்தாலும் ஒரே தாக்கம்தான். அந்த தாக்கமானது தனிநபர் அதிகாரமோ, பதவி பெறுவதோ அல்ல. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தாக்கத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். அம்பேத்கரைக் கடவுள் என்று கூறி வாக்குக் கேட்பவர்கள் அம்பேத்கரின் அரசியல் சட்டத்தைச் சிதைக்கும் வேலையையும் செய்கின்றனர்” என்று கூறினார்
தொடர்ந்து பேசிய தொல். திருமாவளவன், “தேர்தல், கூட்டணி இதையெல்லாம் விடுங்கள். அது இரண்டாம் பட்சம் தான். ஆனால் அதில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இப்போது சண்டை நடந்துகொண்டு உள்ளது. அவர்கள் நினைப்பதைப் போல அவர்கள் விரும்புவதைப் போலத் தான் நான் செய்ய வேண்டும். சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உங்கள் எதிர்பார்ப்புக்கு எல்லாம் எதிர்வினையாற்றவா நாங்கள் இயக்கம் வைத்திருக்கிறோம்? நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகத் தெளிவாக இருக்கிறோம். எதை எப்போது எப்படி அணுகவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது நம்முடைய நோக்கங்களில் ஒன்று. அதை எதற்கு யாருக்குப் பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அந்த தெளிவோடு தான் எல்லாவற்றையும் அணுகுகிறது. திருமா தடுமாறுகிறார், பின்வாங்குகிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள். அவர்களுக்காக இதைச் சொல்லவில்லை, அவர்களால் உங்களுக்குள் எந்த தடுமாற்றமும் வந்துவிடக்கூடாது எனச் சொல்லுகிறேன். நம்மை அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். ஆனால் நம்முடைய சுயமரியாதையை, தன்மானத்தை எவனும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுக்குத் தகுதி பெற்றவர்கள் தமிழகத்தில் இல்லை. நாங்கள் எவ்வளவு தெளிவுடன் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.
ஆனந்த் டெல்டும்டே அவர்கள் சொன்னதைப் போல அம்பேத்கரின் செயற்பாடுகளை வைத்து அவரைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் எதிர்பார்த்த தாக்கத்தை இங்கு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறி உரையை முடித்தார் அவர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/PorattangalinKathai