“தமிழகத்தில் இணையவழி மோசடியால் 9 மாதங்களில் ரூ.1100 கோடி இழப்பு!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஆசியா ரிசர்ச்சர்ஸ் ஆன்டி-வைரஸ் அசோசியேஷன் (AVAR) நடத்திய 27ஆம் ஆண்டு உலக சைபர் செக்யூரிட்டி உச்சி மாநாடு சென்னையில் டிசம்பர் 4 முதல் 6 வரை நடந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இம்மாநாட்டில், இணையவழி மோசடிகளைத் தடுக்க அரசின் திட்டங்களை பற்றி விளக்கி பேசினார்.

சைபர் க்ரைம் மோசடி

சைபர் தாக்குதல்கள்: 3-வது இடத்தில் இந்தியா

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் இன்றைய உலகில் , சைபர் செக்யூரிட்டி என்பது தொழில்நுட்பம் சார்ந்த அக்கறை பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக‌ நம்பிக்கையின் அடிப்படை தூணாக விளங்குகிறது.

ஐபிஎம் வெளியிட்டுள்ள 2024 தரவுகளின் படி உலகம் முழுவதும் தரவுகள் மீறல் குற்றங்களில் மட்டும் கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது. இது முன் எப்போதையும் விட 10% அதிகமானதாகும். மோசடிக்கு உள்ளாக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்பொழுது அபாய கட்டத்தில் உள்ளன.

இது இந்தியா, சைபர் செக்யூரிட்டியில் துரிதமாக செயல்பட வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 79 மில்லியன் சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தரவு மீறலின் சராசரி செலவு இப்போது $ 2.3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.1100 கோடி இழப்பு..!

இந்தச் சவால்களில் இருந்து தமிழகமும் விடுபடவில்லை. 2024 ஜனவரி முதல் செப்டம்பர் இடையிலான காலத்தின் மட்டும் இணைய நிதி மோசடியில் தோராயமாக ரூ.1100 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இணைய‌ வழி குற்றங்களைத் தடுக்கும் திட்டங்களை வகுப்பவர்களுக்கும், பாதுகாக்க வேண்டியவர்களுக்கும் விழிப்பை கொடுத்து, நம் அனைவரின் பொறுப்பை உணர்த்தும் வகையில் இந்த தரவுகள் அமைவதாக உள்ளது.

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி…

இந்தச் சவால்களை எதிர்கொள்ள, தமிழ்நாடு தீர்க்கமான மற்றும் புதுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சைபர் பாதுகாப்புக் கொள்கை 2.0 பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. இந்த கொள்கையானது மூன்று முக்கிய தூண்களில் கவனம் செலுத்துகிறது:

1. நிலையான உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்றவற்றை மேலும் உறுதியாக்குதல்.

2 திறன் மேம்பாடு. சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி, உலக அளவில் சைபர் செக்யூரிட்டியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ வழிவகுத்தல்.

3 .கூட்டு நிர்வாகத்தை உருவாக்குதல் .

சைபர் க்ரைம்

பொதுத்துறை, தனியார் மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் இணைந்து சைபர் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள ஒன்றாக செயலாற்ற வழிவகுத்தல்.

இந்த முயற்சிகள் நிச்சயம் மோசடியின் அளவை குறைக்கும். டிஜிட்டல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாடு எப்போதும் ஆக்கபூர்வமான புதிய முயற்சிகளுக்கு உகந்த சூழலை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது‌.

அரசின் ஈ-கவர்னன்ஸ் மூலம் ‘தமிழ்நாடு பிளாக்செயின் பேக்போன் – நம்பிக்கை இணையம்(NI)’ என்ற திட்டம் துவங்கப்பட்டு, ஒவ்வொரு குடிமக்களுக்குமான அடிப்படை இணைய வழி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய பார்ட்னர்களுடன் தமிழகம் இணைந்து செயலாற்ற எப்பொழுதும் தயாராகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் AVAR ‌ அமைப்பின் முன்னெடுப்புகளை பாராட்டி, இந்த 2024 மாநாடு சிறப்பாக வெற்றி பெற வாழ்த்தினார்.