நாகப்பட்டினத்திற்குக் கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில், நேற்று (டிசம்பர் 6) மதியம் மியான்மார் (பர்மா) நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் பாய்மரப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தியக் கடற்படை அதிகாரிகள், இந்தியக் கடல் எல்லை பரப்பிற்குள் பாய்மரப்படகு ஒன்று நிற்பதைக் கண்டு சந்தேகித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனே கடற்படை அதிகாரிகள், அந்த 4 பேரையும் பாய்மரப் படகுடன் கைது செய்து, இன்று (டிசம்பர் 7) நாகைக்கு அழைத்து வந்தனர்.





அதைத் தொடர்ந்து, கைதானவர்களைக் கடலோர காவல்படை துணை தளபதி கணேஷ், கடலோர காவல்படை காரைக்கால் நிலையத்தில், நாகை மாவட்ட கடலோர காவல் குழும ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்டவர்கள் நாகை கடலோர காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கைதான நான்கு மீனவர்களும் பர்மிய மொழி மட்டுமே பேசுகின்றனர். வேறு மொழி தெரியாததால் தற்பொழுது வரை சைகையில் மட்டுமே அவர்களால் விவரம் கூற முடிகிறது.
இந்த நிலையில், ‘இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (அந்நிய கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல்)’ சட்டத்தில் உள்ள பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் படுத்தப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. புயல் காரணமாக மீனவர்கள் தத்தளித்தபடி இந்தியக் கடல் எல்லை பரப்பிற்குள் வந்தார்களா?, எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
