இந்தியாவின் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்.’ விகடன் பிரசுரமும், Voice of Commons நிறுவனமும் இணைந்து வெளியிடும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய, த.வெ.க தலைவர் விஜய், “வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்னைக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதை என்னால் நன்றாக யூகிக்க முடிகிறது. நான் இப்போது சொல்றேன், அவர் மனசு முழுக்க முழுக்க இன்னைக்கு நம்ம கூடத்தான் இருக்கும்” என்று பேசினார்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன்,
“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக முடிவெடுத்தேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.