வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்பாட்டிற்கு வந்த கல்லூரி மாணவிகள் விடுதிக் கட்டடம்!

வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி பகுதியில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் அரசு இளங்கலை கல்லூரி மாணவிகளுக்கான தங்கும் விடுதி கடந்த ஆகஸ்ட் மாதம் திறப்பு விழா நடத்தப்பட்டது. திறப்பு விழா நடத்தியும் இந்த மாணவிகள் விடுதி பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இது குறித்து விகடனில் டிசம்பர் 2-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. செய்தி வெளியாகிய 3 நாள்களில் இந்த கல்லூரி மாணவிகள் விடுதி கட்டடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் படிக்கும் அரசு கலை கல்லூரி மாணவிகள் பயன்படும் வகையில் தொராப்பாடி பகுதியில் தாட்கோ நிறுவனத்தின் சார்பில் பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் திறப்பு விழா நடத்தி மூன்று மாதங்கள் ஆகியும் இந்த கட்டடம் மாணவிகளின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதனால் மாணவிகள் தற்காலிகமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பென்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த கட்டடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தாட்கோ நிறுவனத்தின் செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டு, விகடனில் டிசம்பர் 2-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில், “மாணவிகளின் நலன் கருதி ஆதிதிராவிடர் நலத்துறையால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு விரைவில் இந்த விடுதியை திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கிறோம்” என்று கூறி இருந்தார். செய்தி வெளியான மூன்றே நாள்களில் நேற்று இந்த கட்டடம் கல்லூரி மாணவிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தற்போது இந்த கட்டடம் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து முறையாக ஆதி திராவிடர் நலத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் தற்காலிகமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பென்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவிகள் தற்போது இந்த புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த புதிய விடுதி கட்டடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், வேலூர் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிக்கும் கலை கல்லூரி மாணவிகள் 50 பேர் தற்போது பயன்பெற்று உள்ளனர்.