‘லண்டன் ரிட்டன்… வெள்ள ஆய்வு… 2026 தேர்தல் `வாழ்வா சாவா’’ – அண்ணாமலையின் திட்டம் என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலையில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்ற அண்ணாமலை கடந்த 1-ம் தேதி சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறோம். அதே சமயம், தனது முதல் மாநாட்டில் நிறைய விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். அதைப்பற்றி நேரம் வரும் போது பேசுகிறேன். விஜய் முழு நேர அரசியலுக்கு வந்து, அவரது கருத்துக்களை முன்வைக்கும் போது, பா.ஜ.க-வும் தனது கருத்துக்களை மக்கள் முன்பு வைக்கும். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார்.

விஜய்

புதிதாக வேறு எதுவும் அவர் பேசவில்லை. விஜய்யின் பேச்சு, அவரது கொள்கை, கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடுதான் ஒத்துப்போகிறது. எனவே அவரது அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு என்பது மக்களுக்கு தெரியும். புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பா.ஜ.க எப்போது பயப்படாது. நடிப்பு என்பது வேறு, அரசியல் களம் என்பது வேறு. அக்.28-ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார். அவரை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். தி.மு.க எப்போதும் ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டைதான் பா.ஜ.க தொடர்ந்து வைத்து வருகிறது. இன்று அது நிரூபணமாகி உள்ளது” என்றார்.

அங்கிருந்து கோவை புறப்பட்டு சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் 2-ம் தேதி சென்னை திரும்பினார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நிர்வாகிகளிடத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் வித்தியாசமான சூழல் நிலவுகிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, மூத்த தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறோம்.

அண்ணாமலை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து மத்திய அரசுக்கும், பா.ஜ.க தேசிய தலைவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, பாஜக மூத்த தலைவர்கள் டெல்டா பகுதிகளுக்கு செல்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு பாஜகவில் உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். நமக்கு நேரம் இல்லை. தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை 2026 தேர்தல் வாழ்வா சாவா என்கிற தேர்தல். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அனைவரும் களத்தில் வேகமாக உழைக்க வேண்டும்” என்றார். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர் பார்வையிடுவது, மக்களுக்கு ஆறுதல் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் முறையாக வழங்குவது இல்லை. எனவே பார்ப்பதால் மட்டும் எதுவும் நடந்துவிடாது. நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுதான் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்கும். இதை செய்யவில்லை என்றால் சாதாரண அரசியல்வாதியாகவே போய்விடுவார். லண்டனுக்கு செல்வதற்கு முன்பு தி.மு.க-வின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தினார். அதில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் பா.ம.க-வுடன் கூட்டணி வைத்ததாலும், கூடுதல் இடங்களில் போட்டியிட்டதாலும் வாங்கு சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே பாஜக வளர்ந்துவிட்டது என சொல்லிவிட முடியாது. இந்த சூழலில்தான் லண்டன் சென்று திரும்பிய பிறகு சில விஷயங்களை முன்னெடுத்திருக்கிறார். அதிலும் கட்சியில் மோடி ஐகான் ஆக இருக்கும் நிலையில் வழக்கம் போல தன்னைதான் அண்ணாமலை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

ப்ரியன்

விஜய் அம்பேத்கார், பெரியார், காமராஜர் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்தார். திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் இரண்டு கண்கள் என்றார். ஆனால் இதில் திராவிடம் குறித்து விஜய் பேசியதை மட்டும் அண்ணாமலை விமர்சனம் செய்கிறார். தமிழ் தேசியம் குறித்து பேசினால் அது சீமானையும் சேர்ந்து விமர்சனம் செய்வது போல இருக்கும். எனவேதான் அதுகுறித்து அண்ணாமலை பேசுவதில்லை. இதன்மூலம் சீமானை மென்மையாக அணுகுகிறீர்களா என்கிற கேள்வி எழுகிறது. எனவே வெள்ளத்தை வைத்தும் தன்னை பரபரப்பான அரசியல் செய்யாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MaperumSabaithanil