முதல்வரான பட்னாவிஸ்; துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித்பவார்… பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூடி தேவேந்திர பட்னாவிஸை தங்களது புதிய தலைவராக தேர்ந்தெடுத்தனர். ஏற்கெனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராவாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

ஏக்நாத் ஷிண்டே

நேற்று மாலையில்தான் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராவார் என்று உறுதியானது. இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி மும்பை ஆசாத் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அஜித்பவார்

விழாவிற்கு நடிகர் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். அதோடு ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு, பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா, பியூஸ் கோயல், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், சஞ்சய் தத், ரன்பீர் கபூர், மாதுரி தீட்ஷித், முகேஷ் அம்பானி, குமாரமங்களம் பிர்லா, பிரனவ் அதானி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்க இருந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் ஒரே நேரத்தில் தலைவர்கள் இருந்த மேடைக்கு வந்து அனைவரையும் வரவேற்றனர்.

மகாராஷ்டிரா முழுவதும் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் விழாவில் கலந்துகொண்டனர். விழா நடைபெறும் மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.

5 மணிக்கு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் 5.30 மணிக்குத்தான் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பட்னாவிஸ் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அஜித்பவார் முதல்முறையாக தனது பெயரோடு தனது தாயார் பெயரையும் சேர்த்துகொண்டிருந்தார். விழா 10 நிமிடம் மட்டுமே நடந்தது.

புதிய அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இலாகா ஒதுக்கீடு தொடர்பாக சிவசேனா மற்றும் பா.ஜ.க இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் இப்போது அமைச்சரவை பதவியேற்கவில்லை.